தடையற்ற மின்னிலக்க முறை வர்த்தகப் பரிவர்த்தனைகளை விரைவாக்க உதவும் தொழில்நுட்பம்

தடையற்ற மின்னிலக்க முறை வர்த்தகப் பரிவர்த்தனைகளை விரைவாக்க உதவும் தொழில்நுட்பம்

2 mins read
69e41b85-3015-4535-a01a-ebd66cd29d4b
வர்த்தகங்களுக்கு உடனடி கட்டணத்தைச் செலுத்தும் முன்னர், நிறுவனங்கள் மின்- விவரப் பட்டியலுடன் வழங்கப்படும் இணைப்பைத் தட்டி, ரொக்கத் தொகை சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்தால் போதும்.ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சிங்கப்பூர் தனது மின்னிலக்க மயமாக்கலைத் தொடர்ந்ததால், வர்த்தகங்கள் தற்போது தடையற்ற இணைய பாணியில் ஒன்றுக்கொன்று கட்டணம் நிர்ணயித்து, பணம் செலுத்த முடியும்.

வர்த்தகங்களுக்கான உடனடி நிதி பரிமாற்ற சேவையான 'பேநவ்' கார்ப்பரேட்டை' சிங்கப்பூரின் நாடு தழுவிய மின்-கட்டண விவரக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) நேற்று தெரிவித்துள்ளது.

முக்கிய உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவற்றுடன் இணைந்து ஆணையம் இந்தத் தீர்வை உருவாக்கியது. முன்னதாக, ஒரு மின்-கட்டண விவரத்தைப் பெற்றதும், நிறுவனங்கள் தங்கள் வங்கியின் இணைய வங்கி தளத்திற்குள் சென்று, வங்கி பரிமாற்றம் செய்வது அல்லது காசோலை அனுப்புவது போன்ற கூடுதலான ஒரு செயல்பாட்டைச் செய்ய வேண்டும்.

தற்போது மின்-கட்டண விவரத்துடன் வரும் ஓர் இணைப்பைத் தட்டினால் போதும். அதுவே கட்டணத் தளத்திற்கு இட்டுச் செல்லும். பொருத்தமான தகவல்களும், பொருட்களும் தானாகவே நிரப்பப்பட்டு, விலையைச் சரிபார்க்கச் சொல்லும். பின்னர் வர்த்தகத்தின் உறுப்பினர்களுக்கு உடனடியாக கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

கடந்த 2018ல் 'பேநவ்' கார்ப்பரேட்' அறிமுகமானதிலிருந்து உடனடி கட்டணம் செலுத்தும் முறை சாத்தியமானது. தற்போது 'இன்வாய்ஸ்நவ்' என்றழைக்கப்படும் மின்-கட்டண விவர வழிமுறை சென்ற ஆண்டு அறிமுகமானது. 25,000க்கும் அதிகமான வர்த்தகங்கள் இந்தக் கட்டமைப்பில் இணைந்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது.

வர்த்தகங்கள் விலை விவரங்களை எளிதில் பரிமாறிக்கொள்ளவும், கட்டணங்களை வசூலிக்கவும் உதவுகிறது.

"கடந்த மூன்று மாதங்களுக்குள் மின்-கட்டண விவரப் பட்டியலில் வர்த்தகங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் இணைந்துள்ளன," என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் உதவித் தலைமை நிர்வாகி ஜேன் லிம் கூறினார். அதிகமான வர்த்தகங்கள் பயனைடையும் வகையில் மேலும் மின்னிலக்கத்திற்கு மாறுவது இலக்கு என்றார் அவர். இந்த மின்னிலக்க முறைக்கு மாற அரசாங்கம் வர்த்தகங்களுக்கு மானியங்களையும் வழங்கி வருகிறது.