ஏட்டோஸ் பாதுகாவல் துறை நிறுவனம், பாதுகாவல் துறை ஊழியர்கள் சங்கம் (யுஎஸ்இ) ஆகியவற்றுக்கு இடையே நேற்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஏட்டோஸ் நிறுவனத்தின் பாதுகாவல் அதிகாரிகள் புதிய மூன்று அடுக்கு பயிற்சி திட்டத்தின் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள்.
இத்திட்டம் வழி, மின்னிலக்க திறன், அவசரகால செயல்பாடு, முதலுதவி, வாடிக்கையாளர் சேவை, வசதிகள் நிர்வாகம் உள்ளிட்ட புதிய திறன்களில் பாதுகாவலர்கள் பயிற்சி பெறுவர்.
கடந்த 2016ல் பாதுகாவல் துறையில் அறிமுகமான முற்போக்கான சம்பள முறை மூலம் 2018ல் $1,922 சம்பளம் பெற்ற பாதுகாவலர்கள் தற்போது $2,184 பெறுகிறார்கள் என்று நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
“ஒவ்வோர் ஊழியரும் ஒவ்வொரு வேலையும் முக்கியமானது. குறிப்பாக சிங்கப்பூரில் குறைந்த ஊதியத் துறைகளுக்கு, உதவ அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்,” என்றார் அவர்.