ஒரு புதிய திட்டத்தின் கீழ் ஐபிஎம் நிறுவனம், பணியிடை மாற்றத்தை விரும்பும் கிட்டத்தட்ட 800 தொழில் வல்லுநர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு குறித்து ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க உள்ளது. மே மாதம் அறிவிக்கப்பட்ட, இந்த ஆண்டு சிங்கப்பூரர்களுக்கு 30,000 பயிற்சி இடங்களை வழங்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.
சாங்கி பிசினஸ் பூங்காவில் உள்ள ஐபிஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் பேசிய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், 30,000 இடங்களில் 18,000 இடங்களை ஐபிஎம் போன்ற நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள், உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பயிற்சிகளில் காட்டப்படும் ஈடுபாடும் வலுவாக உள்ளது. இதுவரை 15,000 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர் என்றார் அவர்.
“பணியிடை மாற்றத்தை விரும்பும் (தொழில் வல்லுநர்கள்) தொடர்ந்து மறுதிறன் பெறவும், மேம்படவும் சரியான மனநிலையைக் கொண்டிருக்கும் வரையில், அரசாங்கம் தனது பங்கை ஆற்றும். பொருத்தமான பயிற்சியினைப் பெறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும், பொருளியல் மீட்சி பெறும்போது வேலையைப் பெற தகுதியான நிலையில் இருப்பதற்கும் பங்கை ஆற்றும்,” என்றார் திரு வோங்.