ஆல்பைன் இஞ்ஜினியரிங் சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெருமாள் அழகுராஜா என்ற ஊழியர், பினாய் ரோட்டில் இருக்கும் கெப்பல் ஷிப்யார்ட் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில், பணி நிமித்தம் ஒரு குழாயில் இறங்கியபோது, போதிய ஆக்சிஜன் இல்லாமல் போனதால் மூச்சுவிட முடியாமல் மரணம் அடைந்தார்.
அந்த ஊழியர், 2014 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முற்பகல் சுமார் 11 மணிக்கு ‘ஃபோம்’ துண்டுகளை எடுப்பதற்காக 90 செ.மீ. அகலமும் 30 செ.மீ. ஆழமும் கொண்ட ஒரு குழாயில் கயிறு ஒன்றைப் பயன்படுத்தி இறங்கினார்.
ஐந்து நிமிடங்கள் ஆகியும் எந்த சத்தமும் இல்லாததை அடுத்து ரெங்கநாதன் சந்திரசேகரன் என்ற சக ஊழியர் அந்தக் குழாய்க்குள் சென்று பார்த்தார்.
குழாயில் 22 மீ. ஆழத்தில் பெருமாள் அழகுராஜா சுயநினைவு இழந்து கிடந்ததை அவர் கண்டார்.
தொடர்ந்து இருவரும் மேலே கொண்டு வரப்பட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அன்று பிற்பகல் சுமார் 1.00 மணிக்கு பெருமாள் மரணமடைந்தார்.
ரெங்கநாதனுக்கு காயம் எதுவும் இல்லை.
அந்தப் பகுதியில் இருந்த சில குழாய்களுக்குள் வெல்டிங் இணைப்புப் பணியை மேற்கொள்வதற்காக ஆர்கான் வாயு முன்பு நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. திரு அழகுராஜா குழாய்க்குள் இறங்கியபோது, அவரைச் சுற்றிய பகுதியில் இருந்த ஆக்சிஜனுக்குப் பதில் ஆர்கான் வாயு சூழந்தது. அதனால் அவருக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
அந்தக் குழாய்க்குள் ஆர்கான் வாயு இருக்கிறதா என்பதை திரு அழகுராஜா பரிசோதிக்கவில்லை. அவ்வாறு பரிசோதிப்பது தொடர்பான பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆல்பைன் இஞ்ஜினியரிங் நிறுவனத்துக்கு இன்று (செப்டம்பர் 24) $190,000 அபராதம் விதிக்கப்பட்டது. கெப்பல் ஷிப்யார்ட் நிறுவனத்துக்கு $70,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தை மீறி குற்றம் செய்ததாக இந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
குழாய் போன்ற இடங்களில் வேலை பார்க்க போதிய அளவுக்கு ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்க ஆல்பைன் இஞ்ஜினியரிங் தவறிவிட்டது என்று விசாரணையின்போது மனிதவள அமைச்சு சார்பில் வாதிடப்பட்டது.
குழாய் போன்ற இடங்களில் இருந்து ஊழியர்களை மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் சாதனமும் அந்த நிறுவனத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆல்பைன் இஞ்ஜினியரிங் ஊழியர்கள் குழாய் போன்ற இடங்களில் வேலை பார்க்க தேவைப்படும் ஆற்றலுடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த கெப்பல் ஷிப்யார்ட் தவறிவிட்டதாகவும் கூறப்பட்டது.