சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் வெப்பம் காரணமாக வீரர்கள் பாதிக்கப்படக்கூடிய சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 விழுக்காடு குறைந்துள்ளன.
வெப்பத் தாக்குதல் காரணமாக யாரும் மரணம் அடையவில்லை என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் நிலை கார்ப்பரல் டேவ் லீ என்பவர் 2018ல் வெப்பத் தாக்குதல் காரணமாக மரணமடைந்தார்.
அதனை அடுத்து வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைக்க பல மேம்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து பாதுகாப்பு நிர்வாகத்தையும் பயிற்சி முறையையும் பலப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காணும்.
பயிற்சி விபத்துகள் அறவே இல்லாத ஒரு நிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நிறைவேற்ற அவை இரண்டும் பாடுபடும் என்றும் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
பயிற்சியின்போது வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் 2012 முதல் குறைந்துள்ளன.
ராணுவத்தில் 2012 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை வெப்பம் காரணமாக ஏற்பட்ட மயக்கச் சம்பவங்கள் 25 நிகழ்ந்தன. வெப்பம் காரணமாக வீரர்கள் சோர்வடைந்த சம்பவங்கள் 137 நிகழ்ந்தன என்று 2018ல் ஒரு குழு தாக்கல் செய்த அறிக்கை தெரிவித்தது. யாரும் மரணம் அடையவில்லை.
முதல் நிலை கார்ப்பரல் டேவ் லீ மரணத்தை அடுத்து அந்த ஐவர் குழு அமைக்கப்பட்டு ஆயுதப் படைகளில் பயிற்சியின்போது வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்பு களைத் தவிர்ப்பதற்கான உத்திகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
பயிற்சியின்போதும் பயிற்சிக்குப் பிறகும் படைவீரர்கள் தங்கள் கைகளை 15 முதல் 30 வினாடிகள் ஐஸ் நீருக்குள் வைத்திருந்து அதன் மூலம் உடல்வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இடம்பெற்றது.
வீரர்கள் குளிர் அட்டைகளை உடலில் கட்டிக்கொண்டு அதன் மூலம் வெப்பத் தாக்குதல்களைத் தவிர்த்துக் கொள்ளவும் 2018 முதல் வசதிகள் இடம்பெற்றன. இதர பல ஏற்பாடுகளும் இடம்பெற்று வந்துள்ளன.
தளபதிகள், மருத்துவச் சேவையாளர்கள் அைனவருக்கும் புதிய பயிற்சி விதிமுறைகள் நடப்புக்கு வந்தன. நேரம், இடம், அடையாளம் பற்றிய எளிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாத பயிற்சி வீரர் ஒவ்வொருவரையும் அப்புறப்படுத்த இந்த விதிமுறைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.
படை வீரர்கள் பாதுகாப்பு வரம்பைக் கடந்து அளவுக்கு அதிகமாக பயிற்சியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அதிக வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டன.