சிங்ஹெல்த் பலதுறை மருந்தகத்தைச் சேர்ந்த தாதியர்கள் சிலர் சாப்பாட்டு நேரங்களிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகும் வாரமுடிவு நாட்களிலும் ஓய்வின்றி அறப்பணிக்காக முகக்கவசங்களைத் தைத்துக் கொடுக்கிறார்கள்.
அவர்கள் உருவாக்கிய முகக்கவசங்கள் சிங்ஹெல்த் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை உதவி தேவைப்படும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சிங்ஹெல்த் நிறுவனத்தின் தாதியர் நிர்வாகத் துறை உதவி இயக்குநரான டான் சியாம் கிங் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார். இந்த யோசனை இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னிடம் உதித்ததாக திருவாட்டி டான், 64, குறிப்பிட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகி இருந்த ஒரு செய்தியைப் படித்து முகக்கவசம் தைப்பது எப்படி என்பதை இவர் கற்றுக்கொண்டார். இவர் தைத்தவற்றைப் பயன்படுத்தியவர்கள், முகக்கவசங்கள் வசதியாகவும் பொருத்தமாகவும் இருப்பதாகக் கூறினர்.
அதனால் ஊக்கமடைந்த திருவாட்டி டான் தனது முயற்சி களை வேகப்படுத்தினார். இந்தச் சேவையில் ஈடுபட தாதியர்கள் முன்வரலாம் என்று ஆகஸ்ட் மாதம் இவர் அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 29ஆம் தேதியே சுமார் 24 தாதியர்கள் முன்வந்தனர். தைக்கத் தெரியாதவர்கள் இதர வழிகளில் உதவினார்கள். தையல் இயந்திரங்கள் முதலான செலவுகளைத் தாதியரே ஏற்றுக்கொண்டார்கள். செப்டம்பர் 1 முதல் 18 வரை ஓய்வு நேரத்தில் தாதியர்கள் மேலும் பல முகக்கவசங்களைத் தைத்து உருவாக்கினர்.
முடிவில் 430க்கும் அதிக முகக் கவசங்கள் உருவாயின. அவை தலா $10 விலையில் விற்கப்பட்டன.
இந்த அறப்பணியில் பக்கிரிசாமி சரோஜினி தேவி என்ற 66 வயது தாதியும் பங்கெடுத்துக்கொண்டார்.
“வசதி குறைந்த நோயாளிகளுக்கு உதவுவதால் இதில் ஈடுபடுவது ஒரு வகை மனநிறைவைத் தருகிறது. இதனால் இதில் நான் ஈடு பட்டேன்,” என்று சிங்ஹெல்த் பாசிர் ரிஸ் பலதுறை மருந்தகத்தின் நிர்வாகியான திருவாட்டி சரோஜினி தேவி கூறினார்.