சிங்கப்பூரின் இறையாண்மை நிதியமான ஜிஐசியும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் முதலீட்டு நிறுவனமும் கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
அதே வேளையில், எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்குத் தோதாக அவை தொடர்ந்து தங்களைச் சரிசெய்துகொள்ளும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
முதலீட்டு வாய்ப்புகள் பற்றி அந்த இரண்டு அமைப்புகளும் தனக்கு விளக்கம் அளித்ததாகவும் அதிபர் நேற்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
அந்த இரண்டு அமைப்புகளும் சிங்கப்பூரின் சேமிப்புகளை முதலீடு செய்வதால் அவற்றின் உலகப் பொருளியல் வாய்ப்புகள், முதலீட்டு உத்திகள், செயல்திறன் ஆகியவற்றைப் பற்றி வழக்கமாக தனக்கு விளக்கம் அளிக்கவேண்டியது முக்கியமானது என்று அதிபர் திருவாட்டி யாக்கோப் குறிப்பிட்டார்.
ஆண்டுக்குக் குறைந்தது இரண்டு முறை தனக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது என்றும் இந்த ஆண்டில் மெய்நிகர் பாணியில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அதிபர் கூறினார்.
இந்த ஆண்டில் இதுவரை அளிக்கப்பட்ட விளக்கத்தில் கொவிட்-19 பாதிப்புகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார். தெமாசெக் நிறுவனத்தின் நிகர முதலீடுகள் 2020 மார்ச் 31 நிலவரப்படி $306 பில்லியன்.
இது சென்ற ஆண்டில் $313 பில்லியன் என்று இந்த அமைப்பு தெரிவித்தது.
கொவிட்-19 காரணமாக பல முதலீட்டாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதை அதிபர் சுட்டினார். இதற்கு சிங்கப்பூர் அமைப்புகளும் விதிவிலக்கு அல்ல.
கொவிட்-19 பாதிப்புகளைத் தடுக்க ஜிஐசி அமைப்பும் தெமாசெக் நிறுவனமும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.
கொவிட்-19க்கு பிந்தைய உலகத்திற்குத் தோதாக ஒவ்வொருவரும் தங்களைச் சரிசெய்துகொண்டு வருகிறார்கள். தேவை மற்றும் விநியோக தொடர்புகளும் மாற்றமடையக்கூடும்.
இந்த நிலையில், ஜிஐசி அமைப்பும் தெமாசெக் நிறுவனமும் எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தொடர்ந்து பொருத்தமான நிலையில் இருந்து வரவேண்டும் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், ஜிஐசி, தெமாசெக் ஆகியவை செய்துள்ள முதலீடுகள் மூலம் கிடைக்கும் நிகர முதலீட்டு வருமானம், அரசாங்கத்துக்குக் கிடைக்கும் மிக முக்கிய வருவாய் ஆகும்.