கொவிட்-19 நெருக்கடி காலத்தில் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்கள் அதிக பதற்றத்தில் இருந்ததால், அவர்களின் மனவேதனையும் அதிகரித்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மனவேதனையால் அவதியுறுவோருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டு, மீள்திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி விளக்கும் பொது விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையிலும் தேசிய சமூக சேவை மன்றம் அதன் தேசிய இயக்கத்தை விரிவுபடுத்தவுள்ளது.
கொரோனா பரவல் விளைவித்த அதிகமான மனநலச் சவால்களைச் சமாளிக்கும் நோக்கில், மனநலம் பற்றிய களங்கத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தின் மூன்றாம் பதிப்பை மன்றம் நேற்று வெளியிட்டது.
மெய்நிகர் முறையில் நடைபெற்ற இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தேசிய சமூக சேவை மன்றம் 900 பேரிடம் நடத்திய கருத்தாய்வில், நோய் முறியடிப்புக் காலத்தில் சிங்கப்பூரர்கள் அதிகளவில் மனவேதனைக்கு ஆளாகினர் என்றும் முன்னரே மனநலப் பிரச்சினை இருந்தோருக்கு அது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரியவந்ததாகக் கூறினார்.
“ஈராண்டுகளுக்குமுன் இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். அப்போது வேறு உலகமாக இருந்தது. நாம் ஏற்படுத்திய வலுவான அடித்தளத்தைக் கொண்டு சிங்கப்பூர் நிலையாக வளர்ந்துகொண்டிருந்த வேளையில், நமது பொருளியல் உருமாற்றம் பெற்றது; நமது சமூக பிணைப்பு வலுப்பெற்றிருந்தது,” என்று திரு மசகோஸ் விவரித்தார்.
“கொவிட்-19 நெருக்கடி, மனநலத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ளக்கூடிய பிரச்சினையாக உருவாக்கிவிட்டது. கிருமித்தொற்றுக்கு ஆளாவது, வேலைகளை இழப்பது, சமூக அளவில் தனிமைப்படுத்தப்படுவது என்று பலர் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தனர்.
“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் மனவேதனையில் அவதியுறுவதால், மனநலத்திற்கான தேவைகள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் திரு மசகோஸ் விளக்கினார்.
“மனநலப் பிரச்சினை உள்ளோருக்கு ஆதரவளிக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்று இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இளையர் மனநல நல்வாழ்வுக் கட்டமைப்பு.
“அதன்மூலம் இளையர்களிடையே மனநலத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று 1,000க்கு மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மற்றொரு திட்டமான, ‘மைண்ட்லைன்.எஸ்ஜி’ இணையவாசல் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தனிநபர்கள் தங்கள் மனஉளைச்சலுக்குத் தீர்வு காணும் வளங்களைத் தேடுவதற்கும் தங்கள் நல்வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவி வருகிறது.
“மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் ஆதரவளிக்கும் நோக்கத்தில், சமூக மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து நடப்பில் உள்ள கொள்கைகளை மறுஆய்வு செய்து வருகிறோம்,” என்றார் திரு மசகோஸ்.