டிபிஎஸ் பேலா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வாடிக்கையாளர்கள் இனி கூகல் பே செயலியைப் பயன்படுத்தி தங்களது வங்கிக் கணக்கில் இருந்து ‘பேநவ்’ சேவையுடன் பதிவுசெய்துள்ள எவருக்கும் நேரடியாகப் பணம் அனுப்பலாம்.
ஓசிபிசி வங்கி கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இத்தெரிவை அறிமுகப்படுத்திவிட்டது.
பணப் பரிமாற்றச் சேவையான ‘பேநவ்’வும் கூகல் பே செயலியும் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலமாக, டிபிஎஸ் பேலா, ஓசிபிசி, ஸ்டாண்சார்ட் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கை கூகல் பே கைபேசிச் செயலியுடன் இணைக்க முடியும். அப்படிச் செய்வதன் மூலம் பற்றட்டை இன்றி அவர்கள் பணம் செலுத்த முடியும்.
‘பேநவ்’ சேவை கடந்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சேவையில் பங்கேற்றுள்ள ஒன்பது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசி எண் அல்லது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தவும் பெறவும் முடியும்.
கூகல் பே செயலியைப் பயன்படுத்துவோர் எஸ்ஜிகியூஆர் அல்லது பேநவ் கியூஆர் குறியீட்டை வருடுவதன் அல்லது தனித்து அடையாளம் காட்டக்கூடிய ‘யூஇஎன்’ எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் வணிகர்களுக்குப் பணம் செலுத்தலாம். பணம் பெறுபவர் ‘கூகல் பே’ செயலியைக் கொண்டிருக்கத் தேவையில்லை.
கூகல் பே செயலி மூலம் ஒரு நாளைக்கு $2,000 வரை பணப் பரிவர்த்தனை செய்யலாம். ஆனாலும், பங்கேற்கும் வங்கிகள் தங்களுக்கென பிரத்தியேக வரம்பை வகுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஸ்டாண்சார்ட் வங்கியில் 1,000 வெள்ளியும் ஓசிபிசி வங்கியில் 2,000 வெள்ளியும் ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டிபிஎஸ், ஓசிபிசி, ஸ்டாண்சார்ட் ஆகிய வங்கிகளைத் தவிர்த்த மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கை ‘டிபிஎஸ் பேலா’ மூலமாக இணைப்பதன் மூலம் கூகல் பே செயலியைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
முன்னதாக, ஆப்பிள் பே, சாம்சுங் பே செயலிகளைப் போல கூகல் பே வாடிக்கையாளர்களும் தங்களது கடனட்டைகளைக் கொண்டே கடைகளில் பொருள் வாங்கப் பணம் செலுத்த முடிந்தது. ஆப்பிள் பே, சாம்சுங் பே செயலிகளைக் கொண்டு ‘பேநவ்’ சேவையைப் பயன்படுத்த முடியாது.
கிராப் பே பயனாளர்கள், பேநவ் மூலம் தங்களது ‘இ-வாலெட்’களில் பணம் நிரப்பலாம்.
“சிங்கப்பூரர்களுக்கென வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட புதிய கூகல் பே செயலி, பணம் செலுத்துவதில் எளிதான, பாதுகாப்பான, உதவிகரமான ஒட்டுமொத்த தீர்வை வழங்குகிறது,” என்றார் கூகல் பே செயலியின் பொறியியல் இயக்குநர் பேட்ரிக் டே.
கூகல் பே செயலி பயனாளர்கள் கடைகளில் பொருள் வாங்கும்போது தொடர்பில்லா வாசிப்பான்களில் தங்களது திறன்பேசியைத் தட்டுவதன்மூலம் பணம் செலுத்த முடியும்.
அத்துடன், எம்ஆர்டி, பேருந்துப் பயணங்களுக்கும் இணையத்தளம் வழியாக பொருள் வாங்கும்போதும் கூகல் பே செயலி மூலம் பணம் செலுத்தலாம்.
இந்தச் செயலி மூலமாக கோல்டன் வில்லேஜ், ஷா திரையரங்குகளில் திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கவும் இருக்கைகளை முன்பதிவு செய்யவும் முடியும்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக, புதுப்பிக்கப்பட்ட கூகல் பே செயலியைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடு சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.