கொவிட்-19 கிருமியைக் கண்டறியும் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தங்கும் விடுதிகளில் பதிவாகும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வரும் வாரங்களில் வரக்கூடிய தளர்வுகள் குறித்து அறிவித்திருந்தது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே கூடிய விரையில் கிருமித்தொற்றே இல்லாத ஒரு நிலை சாத்தியமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங், இவ்வாறு பதிலளித்திருந்தார்.
அனைத்து தங்கும் விடுதிகளும் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று மனிதவள அமைச்சு அறிவித்தது.
ஆனால் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து தினமும் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதன் தொடர்பில் திரு வோங், “முதலில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஊழியர்களையும் கிருமித்தொற்றிலிருந்து விடுபடச் செய்தோம். ஆனால் முன்னால் கூறியதுபோல, இதை நாங்கள் எவ்வளவு விரிவாகச் செய்தாலும் எந்தப் பரிசோதனையும் முழுப் பலனளிக்கக்கூடியது அல்ல.
“தலைசிறந்த பரிசோதனைகூட 100% வெற்றி தராது. எனவே தொற்று தொடர்ந்து மிக, மிக மிதமான அளவில் இருக்கத்தான் செய்யும்,” என்றார் அவர்.
இந்தக் குறைந்த அளவு தொற்றையும் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளதென அவர் சுட்டினார்.
தங்கும் விடுதிகளிலும் வேலையிடங்களிலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் எந்நேரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அத்துடன் ‘மிகவும் விரிவான’ முறையில் ஊழியர்களை வழக்கமான கொவிட்-19 பரிசோதனைகளுக்கு அடிக்கடி உட்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய கிருமித்தொற்று சம்பவங்களையும் உடனுக்குடன் அடையாளங்காண முடியும் என்றார் திரு வோங்.
இதற்குமுன் இத்தகைய நிலை அத்தியாவசிய சேவைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நேர்ந்தது என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, அவர்கள் மூன்று முறை கிருமி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மூன்றாவது பரிசோதனையிலும் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக திரு வோங் கூறினார்.
தங்கும் விடுதி ஊழியர்களுக்கும் தற்போது இதே நிலைமை என்று தெரிவித்த அமைச்சர் வோங், பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்யும்போது புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“எனவே நாங்கள் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.
இருப்பினும் தங்கும் விடுதிகளிலோ சமூகத்திலோ கிருமித்தொற்று இல்லை என்றால் சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்கள் இல்லை என்றாகிவிடாது என்றார் பணிக்குழுவின் இன்னொரு தலைவரான சுகாதார அமைச்சர் கான் கிம் யோங். அறிகுறிகளின்றி அல்லது பரிசோதனைக்கு உட்படாத சில கொவிட்-19 நோயாளிகளும் இருக்கலாம் என்ற சூழலை திரு கான் குறிப்பிட்டார்.