தற்போது நிலவிவரும் கொரோனா கொள்ளைநோய் தாக்கம் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் என்று 74 விழுக்காட்டு மக்களைப் பாதித்துள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வன்டர்மென் தாம்சன் எனும் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 500 பேர் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை பங்கேற்றனர்.
கொள்ளைநோய் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொருளியல்தான், மக்களின் கவலைக்கு முக்கிய காரணம்.
பொருளியல் சரிவால் ஏற்பட்ட வேலையின்மை விகித அதிகரிப்பைப் பற்றி அதிகமானோர் கவலைப்பட்டனர். அவர்களில் 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு தங்கள் திறனுக்கேற்ற வேலை கிடைக்குமா என்று கவலை.
பட்டதாரிகள் வேலை கிடைப்பதில் அதிக சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 விழுக்காட்டினர் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டனர்.
கொவிட்-19 என்று வரும்போது, மக்களிடம் இரு அக்கறைகள் காணப்பட்டன. பொது இடங்களுக்குச் செல்லும் அவர்களுக்குக் கிருமி தொற்றுமா, கொள்ளைநோய் தாக்கத்தால் பொருளியல் பின்னடைவு அதிக காலம் நீடிக்குமா என்பதே அந்த இரு அக்கறைகள்.
கடைத்தொகுதிகள், பொது இடங்களுக்குச் சென்றால் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கிருமி தொற்றும் அபாயம் ஏற்படுமா என்று 37 விழுக்காட்டினரும் பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது கிருமி தொற்றுமா என்று 36 விழுக்காட்டினரும் டாக்சி அல்லது தனியார் வாடகை வாகனத்தில் செல்லும்போது கிருமி தொற்றுமா என்று 33 விழுக்காட்டினரும் கவலையடைந்தனர் என்றும் நேற்று வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்தது.