வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வர்த்தக நிர்வாகிகள் மற்றும் நிபுணர்களுக்கான ‘ரெசிடென்ஸ் டிராக்’ என்னும் புதிய முறை பயணத்தை சிங்கப்பூரும் ஜப்பானும் தொடங்கி உள்ளன.
நடப்பில் இருக்கும் பொது சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இது செயல்படுத்தப்படும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
‘ரெசிடென்ஸ் டிராக்’ பயணத்துக்கு அடுத்த வாரம் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த ஜூலை முதல் விவாதித்து வந்ததாக அமைச்சு தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட தடையற்ற இரு
தரப்புப் பயணம் எனப்படும் வர்த்தகத் தடத்திற்கு அடுத்தபடியாக இந்தப் புதிய பயண முறை தொடங்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் குறுகிய கால அத்தியாவசிய வர்த்தகப் பயணம் மற்றும் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ள வர்த்தகத் தடம் வழிசெய்கிறது.
புதிய பயணமுறைக்கான தகுதி, தேவைப்படும் இதர அம்சங்கள், சுகாதார நெறிமுறைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறை ஆகியன குறித்த விவரங்கள் அடுத்த புதன்கிழமைக்குள் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சின் இணையத்தளங்களிலும் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.