மூன்றாண்டுகளுக்கு முன்னர் சாங்கி விமான நிலையத்தில் நிகழ்ந்த கட்டுமான விபத்தில் பங்ளாதேஷ் ஊழியர் மரணமடைந்ததன் தொடர்பில் இரண்டு மேற்பார்வை அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கவனக்குறைவாக நடந்துகொண்டதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரியாக பணியாற்றிய டான் வீ மெங், 44, என்பவருக்கு இரு மாத சிறைத் தண்டனையும் திட்ட மேலாளராக இருந்த லீ சுங் லிங், 48, என்பவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.
இவ்விரு தண்டனைகளும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு கூறியது.
சான் அண்ட் சான் என்ஜினியரிங் என்னும் கட்டுமான நிறுவனத்தின் வேலை நடைமுறைகளில் உள்ள அபாயங்களை கண்டறிந்து மதிப்பிடத் தவறியதாகவும் அபாயங்களைக் குறைக்கும் நடவடிக்கைளைப் பரிந்துரைக்கத் தவறியதாகவும் டான் வீ மெங் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
அதேபோல இந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட லீ சுங் லிங், கட்டுமானத்தளத்தின் வேலை நடைமுறைகளை மறுஆய்வு செய்வதிலும் தற்காலிக உலோக அச்சு தயாரிப்பு நடைமுறைப் பணிக்கான மேற்பார்வையாளரை நியமிப்பதிலும் கவனக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
இவர்களின் கவனக்குறைவால் மியா சலிம், 43, என்னும் பங்ளாதேஷ் ஊழியர் 2017 மார்ச் 22ஆம் தேதி உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உயரழுத்த கம்பிவட கட்டு
மானத்துக்கான உலோக அச்சைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த அவர் சம்பவம் நிகழும்போது நிலத்தடி குழி ஒன்றினுள் இருந்தார்.
அப்போது உலோகத் தகடுக ளில் ஒன்று குழியுனுள் விழுந்து சலிமின் மார்பைத் தாக்கியது.
சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
முறையான நடைமுறைகள் சொல்லித்தரப்படாததால் ஊழியர் கள் அபாயத்தில் சிக்கும் நிலை இருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட் டனர்.
தனது ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிசெய்யக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக சான் அண்ட் சான் என்ஜினியரிங் கட்டுமான நிறுவனத்திற்கு 2018 செப்டம்பரில் $150,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடந்த மாதம் 20ஆம் தேதி ஒப்புக்கொண்ட பின்னர் புதன்கிழமை அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.