சிங்கப்பூரில் பல மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைத்த பின்னர் 17 ஆண்டுகள் தறைமறைவாக இருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு நேற்று நீதிமன்றத்தில் 10½ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 56 வயது ஆடவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது. மாணவர்களான சிறுவர்களை மானபங்கம் செய்த மூன்று குற்றச்சாட்டுகளும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழான ஒரு குற்றச்சாட்டும் அவற்றுள் அடங்கும்.
மாணவர்களின் பாதுகாப்புக் கருதி அவரைப் பற்றிய விவரங்களோ அவர் பணியாற்றிய பள்ளியைப் பற்றிய தகவலோ வெளியிடப்படவில்லை.
உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பின்னர் இந்தோனீசியாவுக்குத் தப்பி ஓடினார். இந்தோனீசிய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக தமது பெயரை மாற்றிக் கொண்டார்.
அதன் மூலம் அவரது அடையாளம் மாறியது. அந்தப் புதிய அடையாளத்தோடு 17 ஆண்டு காலமாக சிங்கப்பூருக்கு அவர் பலமுறை வந்து திரும்பினாலும் அண்மையில் அதிகாரிகளிடம் சிக்கினார்.
சிறுவர்கள் மீது பாலியல் நாட்டம் கொள்ளத் தூண்டும் பீடோஃபிலியா என்னும் உளநோயால் பாதிக்கப்பட்டவர் அந்த ஆடவர் என்றும் அதனால் தனது குற்றங்களில் மீண்டும் அவர் ஈடுபடுவதற்கான ஆபத்து அதிகம் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுவா யிங்-ஹாங் வாதாடினார்.
அதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் நீதிபதி சலினா இஷாக் பேசும்போது ஆடவர் புரிந்த குற்றங்கள் கடுமையானவை என்றும் திட்டமிட்டே அவர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் அவர்கள் தம் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.