பருவநிலை மாற்றம் தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் புதிய மெய்நிகர் பிரசாரத்தை சிங்கப்பூர் பருவநிலைப் பேரணி இயக்கத்தின் இளம் ஏற்பாட்டாளர்கள் தொடங்கியுள்ளனர்.
‘#டேக்பேக்2050’ என அழைக்கப்படும் அப்பிரசார இயக்கத்தின் வாயிலாக நீடித்து நிலைக்கத்தக்க, பாகுபாடற்ற சிங்கப்பூரை உருவாக்குவதற்கான யோசனைகளைத் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பருவநிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஆகும் செலவுகள் மட்டுமின்றி, அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாக இந்தத் தொலைநோக்கு முயற்சி விளங்கும் என்று ஏற்பாட்டாளர் டான் ஹெங் யெங், 24, நம்பிக்கை தெரிவித்தார்.
“அர்ப்பணிப்பு தேவைப்படலாம் என்ற கவலையால், பருவநிலை மாற்றம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்க மக்கள் அஞ்சுவதாக அடிக்கடி நாங்கள் கேள்விப்படுகிறோம். அது வாழ்க்கைத் தரத்தை மோசமாக்கிவிடும் என்று அவர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால், நாங்கள் அதற்குச் சவால் விடுக்க விரும்புகிறோம்,” என்றார் கலை, கலாசாரத் துறையில் பணிபுரியும் குமாரி டான்.
பிரசார அறிமுக நிகழ்வையொட்டி, அரசியல்வாதிகள், கலைஞர்கள், குடிமைச் சமூகத் தலைவர்கள், சிங்கப்பூரர்கள் எனப் பலரும் சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என்பது பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் காணொளி ஒன்றை ‘சிங்கப்பூர் பருவநிலைப் பேரணி’ குழு தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து உள்ளது.
செங்காங் குழுத் தொகுதியின் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திருவாட்டி ரயீசா கான், நடிகை ஊன் ஷு ஆன், 12 வயதான பருவநிலைச் செயற்பாட்டாளர் ஆலிவர் சுவா ஆகியோரும் உருமாற்றம் பெற்ற பொதுப் போக்குவரத்து அமைப்பு, அதிகமான சமூகச் சமத்துவம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்த தங்களின் எண்ணங்களை அக்காணொளி வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பருவநிலைச் செயல்பாட்டிற்கான அனைத்துலக நாளையொட்டி இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மின்னிலக்கப் பருவநிலைச் செயல்பாட்டிற்காக ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்’ என்ற அனைத்துலக இளையர் பருவநிலை இயக்கத்தால் அந்த நாள் அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்காக தங்களின் தனிப்பட்ட, புத்தாக்க யோசனைகளை https://www.sgclimaterally.com/takeback2050 என்ற இணையப்பக்கம் வாயிலாகப் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
உரைநடை, படங்கள், கருத்துப்படங்கள், காணொளிகள் அல்லது ஒலிப்பதிவு போன்ற வழிகளில் அவர்கள் தங்கள் யோசனைகளைத் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
வரும் நவம்பர் மாத இறுதி வரையில் இந்தப் பிரசார இயக்கம் நீடிக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வந்து சேரும் யோசனைகள் தொகுக்கப்பட்டு, அமைச்சர்கள், அரசாங்க அமைப்புகள், பிற அதிகாரபூர்வ அமைப்புகள் என உரியவர்களுக்கு அனுப்பப்படும்.