பழைய காலணிகளை மறுபயனீடு செய்து, பிற பணிகளுக்குப் பயன்படுத்தும் முயற்சியாக ‘ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி)’ அமைப்பு, ‘டவ்’ பொருள் அறிவியல் நிறுவனத்துடன் பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளது.
‘மற்றவர்களுக்குப் பழைய காலணி, எங்களுக்கு எதிர்காலம்’ என அழைக்கப்படும் அத்திட்டம், பொதுமக்களிடம் இருந்து 300,000 இணை காலணிகளைப் பெற்று, அவற்றை ரப்பர் துகள்களாக்கி, அவற்றைக் கொண்டு அடுத்த மூன்றாண்டுகளில் மெதுவோட்டத் தடங்கள், உடற்திறன் பகுதிகள், விளையாட்டுத் திடல்களை அமைக்க இலக்கு கொண்டுள்ளது.
“விளையாட்டு மூலம் நீடித்த நிலைத்தன்மை என்ற பகிர்வு நாட்டங்களை ஊக்குவிப்பதில், இந்தப் பங்காளித்துவம் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி இன்னும் பல பங்காளிகளை ஈர்க்கும் என நம்புகிறோம்,” என்று ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் டெக் யின் கூறினார்.
கடந்த ஆண்டில் அப்புறப்படுத்தப்பட்ட 161,000 டன் துணி, தோல் கழிவுகளில் 4% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
“உருவாக்கி, பயன்படுத்தி, பின் வீசிவிடும் சமூகத்தில் இருந்து, வேறு சமூகத்தை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம். அச்சமூகத்தில் சுழற்சித்தன்மை என்பது இன்றளவிலும் உகந்ததாக இருக்கும். ஆகையால், ஸ்போர்ட்எஸ்ஜி, சமூகம் போன்ற பங்காளிகளுடன் இணைந்து மதிப்புக் கூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்,” என்றார் ‘டவ்’ நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத் தலைவர் ஜோ பென்ரைஸ்.
சுற்றுச்சூழலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்று திரு ஜோ வலியுறுத்தினார்.
‘டவ்’ மற்றும் அதன் வர்த்தகப் பங்காளியான ‘பி.டி. ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வு, உருவாக்க நிபுணர்கள் குழு, ஆறு மாதங்களில் ஒரு முழுமையான செயல்முறையை உருவாக்கி இருக்கிறது.
அதன்படி, காலணிகளின் அடிப்பகுதியில் உள்ள ரப்பர் பாகங்கள், துகள்களாக அரைக்கப்பட்டு, பின் அவை விளையாட்டு உள்கட்டமைப்புகளை அமைக்கப் பயன்படுத்தப்படும். இதன்மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களைப் பயன்படுத்துவது குறையும்.
தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்ட, கரைப்பான் இல்லாத கட்டுத் தொழில்நுட்பத்தின்மூலம் அந்த ரப்பர் துகள்கள் பிணைக்கப்படும்.
சோதனை முயற்சியாக, இப்படி பழைய காலணிகளில் இருந்து பெறப்பட்ட ரப்பர் துகள்களைப் பயன்படுத்தி, இன்னும் திறக்கப்படாத காலாங் காற்பந்து மையத்தில் 200 சதுர மீட்டர் திடல் பரப்பு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகச் சுற்றுச்சூழல் சுகாதார நாளான இன்று தொடங்கி வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை பழைய காலணிகள் சேகரிப்பு இயக்கம் இடம்பெறும்.
ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு நிலையங்கள், விளையாட்டரங்குகள், டெக்கத்லான், ஜேடி ஸ்போர்ட்ஸ் ஆகிய விளையாட்டுச் சாதனங்கள் விற்கும் கடைகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 30 சேகரிப்பு முனைகளில், உலோகத் திருகாணிகள் இல்லாத காலணிகளை பொதுமக்கள் போட்டுவிட்டுச் செல்லலாம்.
பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் தங்களது பழைய காலணிகளை முப்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் நன்கொடையாக வழங்கலாம்.
மேல்விவரங்களுக்கு go.gov.sg/old-shoe-new-future என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.