உடன் பிறந்தவரின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 42 வயது ஆடவருக்கு மூன்றாண்டு சிறையும் ஆறு பிரம்படிகளும் நேற்று தண்டனைகளாக விதிக்கப்பட்டன.
இரு மானபங்கக் குற்றச்சாட்டுகளையும் குழந்தை, இளம்பிள்ளைகள் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்கினார்.
இதேபோன்ற இதர நான்கு குற்றச்சாட்டுகள் தண்ட னை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தண்டிக்கப்பட்டவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை இக்குற்றச்செயல்கள் நிகழ்ந்தன. பெற்றோர் மணவிலக்குப் பெற்றுப் பிரிந்துவிட்டதால் தமது பாட்டியின் பராமரிப்பில் சிறுமி இருந்தார்.
பொங்கோலில் உள்ள தமது மாமாவின் வீட்டுக்கு அவ்வப்போது செல்லும் சிறுமி அங்குள்ள விருந்தினர் அறையில் தூங்குவது வழக்கம்.
அவ்வாறு தங்கி இருந்தபோது மாமா உறவுமுறையில் இருந்த அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாகவும் அவரது முதல் குற்றச்செயல் சிறுமியின் எட்டு வயதிலேயே தொடங்கிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமது மனைவியும் மகனும் தூங்கிய பின்னர் பக்கத்து அறைக்குச் சென்று சிறுமியைச் சீண்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஈராண்டுகள் நீடித்த தொல்லையைப் பொறுக்கமுடியாத சிறுமி, 2017 செப்டம்பரில் தமது மாமா குறித்து போலிசில் புகார் செய்தார். தற்போது சிறுமியின் வயது 12.