அடுத்த ஆண்டு இறுதி வரை சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக் காலக் கணக்குகளுக்குக் குறைந்தபட்ச வட்டியாக 4% வழங்கப்படும் என மத்திய சேம நிதிக் கழகம் அறிவித்து இருக்கிறது.
55 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சாதாரணக் கணக்கில் அதிகபட்சமாக 20,000 வெள்ளியுடன் அவர்களது மொத்த இருப்பில் முதல் $60,000 தொகைக்குக் கூடுதலாக 1% வட்டி வழங்கப்படும். இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் அவர்களின் சாதாரணக் கணக்கில் இருக்கும் தொகைக்கு 3.5% வரைக்கும் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளில் உள்ள தொகைக்கு 5% வரைக்கும் வட்டி கிடைக்கும்.
அதுபோல, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மசே நிதி உறுப்பினர்களுக்கு சாதாரணக் கணக்கில் அதிகபட்சமாக 20,000 வெள்ளியுடன் அவர்களது மசே நிதிக் கணக்கு மொத்த இருப்பில் முதல் $30,000 தொகைக்குக் கூடுதலாக 2% வட்டி வழங்கப்படும்.
இதன் விளைவாக, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் தங்களது ஓய்வுக்காலக் கணக்கில் உள்ள தொகைக்கு 6% வரை வட்டி பெறுவர்.
இதனிடையே, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரைக்குமான காலாண்டில் மசே நிதி சாதாரணக் கணக்கிற்கான வட்டி விகிதம் 2.5 விழுக்காடாகவும் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.