ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலிருந்து சாங்கி கடற்கரை பூங்கா வரை 15 கிலோ மீட்டர் நீள பசுமைப் பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த மத்திய பசுமைப் பாதை நியூ அப்பர் சாங்கி சாலை, லோயாங் வே வழியாகச் செல்லும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார்.
மேலும் சமூகங்களில் உள்ள தடங்களை இணைக்கும் கட்டமைப்பு வழியாக இப்பகுதியில் உள்ள பிற பூங்காக்கள், தோட்டங்களுடன் புதிய பசுமைப் பாதை இணைக்கப்படும் என்றார் அவர்.
கிழக்கிப் பகுதியில் சமூகத் தோட்டங்கள், குழந்தைகளுக்கான இயற்கைச் சூழலில் அமைந்த விளையாட்டுத் திடல்கள் போன்ற இயற்கையுடன் இணைந்த வசதிகள் கட்டப்பட்டு, இந்த பசுமைப் பாதைக் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஹெங் கூறினார்.
தொகுதியின் ஒரு பகுதியான உபின் தீவில் நேற்று நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்ற துணைப் பிரதமர், “இந்த திட்டங்களை செயல்படுத்த மக்களுடன், குறிப்பாக ஈஸ்ட் கோஸ்டில் வசிப்பவர்களுடனான பங்காளித்துவ அடிப்படையில் செயல்படுவதை எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
“இந்தப் பசுமை இடங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துகளையும் திரட்ட விரைவில் உங்களை அணுகுவோம்,” என திரு ஹெங் கூறினார்.
பசுமைப் பாதைக்கான காலக்கெடு இன்னும் முடிவாகவில்லை.
எனினும், நாட்டின் இயற்கைத் திட்டங்களில் ஒன்றாக, கிழக்குப் பகுதியை மேலும் பசுமையாக்கும் திட்டங்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். புதிய மத்திய பசுமைப் பாதையிலும், சமூகப் பாதைகளின் கட்டமைப்பிலும் இயற்கை வனப் பகுதிகளின் தோற்றத்தையும் உணர்வையும் தரும் பலவிதமான மரங்களும் செடிகளும் நடப்படும் என்று திரு ஹெங் கூறினார்.
பசுமை நடையர்களுக்கும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் குளிர்ச்சியான, சுகமான அனுபவத்தை வழங்கும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் 300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இயற்கை நடைபாதைகளை அமைப்பது திட்டம். நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூரின் ஒவ்வொரு சாலையையும் இயற்கை நடைபாதையாக உருமாற்றுவதும் இலக்கு.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட காணொளி செய்தியில் திரு ஹெங், உபின் தீவு தினத்தைக் கொண்டாட புலாவ் உபினுக்கு கிளம்பியபோது, சாங்கி பாயிண்ட் படகுத் துறையிலிருந்து பேசினார்.
அத்தீவுவாசிகள், கல்வியாளர்கள், இயற்கை - மரபுடைமை ஆர்வலர்களைக் கொண்ட உபின் தீவின் நண்பர்கள் கட்டமைப்பு, இத்தினத்தில் அத்தீவின் செறிவான இயற்கை வளத்தையும் கலாசாரத்தையும் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்த மேல் விவரங்களை https://pestaubin-2020.blogspot.com/ என்ற இணையத் தளத்தில் அல்லது தேசிய பூங்கா கழத்தின் சமூக வலைத்தளங்களில் காணலாம்.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் தொடக்கத்திலிருந்து அதிகமான சிங்கப்பூரர்கள் நாட்டின் பசுமையான இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த கூட்டு முயற்சியைப் பாராட்டினார்.
“இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வரும்போது, நாம் தொடர்ந்து வளர வேண்டும், பசுமைத் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்,” என்று துணைப் பிரதமர் கூறினார்.