கல்விக்கு என்றுமே அரசாங்கம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தருகிறது என்றும் ஒவ்வொரு மாணவரும் தனது கல்விப் பயணத்தில் சிறந்த வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சிண்டா உன்னத விருது நிகழ்ச்சியில் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்தார் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான சிண்டா நிர்வாகக் குழுத் தலைவர் இந்திராணி ராஜா.
நேற்று இணையம் வழி நடந்த சிண்டாவின் உன்னத விருது நிகழ்ச்சியில் 19 பிரிவுகளின் கீழ் கல்வி, கலை, விளையாட்டு, தொழில்நுட்பத் திறன் போன்றவற்றில் சிறந்து விளங்கும் 653 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இவ்விருது நிகழ்ச்சியில் இதுவரையில்லாத அளவு ஆக அதிகமான எண்ணிக்கையில் 653 மாணவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 20% அதிகமான மானவர்கள் உன்னத விருதுகளைப் பெற்றுள்ளனர்.
“ஒவ்வொரு மாணவரின் உழைப்பும் பங்கேற்பும் சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. சிண்டா உன்னத விருதுகள் பெற்ற மாணவர்களின் வெற்றி நமது இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
“குறிப்பாக கல்வியில் நமது சமூகம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. மாணவர்களின் கடின உழைப்பைத் தவிர்த்து, பெற்றோர், பள்ளிகள், ஆசிரியர்கள், அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து செயல்படுவதால் இந்த முன்னேற்றம் சாத்தியமானது,” என்று சொன்னார் அமைச்சர் இந்திராணி.
சிண்டா உன்னத விருதுகள் பெற்ற 20% விழுக்காட்டினர் சிண்டாவின் திட்டங்களின் வழி பயன்பெற்றவர்கள்.
“கொவிட்-19 விளைவித்திருக்கும் இக்கட்டான சூழலிலும் தங்களின் முயற்சியைக் கைடவிடாமல் தொடர்ந்து சிறப்பாக செய்ய சிண்டாவின் உன்னத விருதுகள் மாணவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.
“எல்லாப் பிள்ளைகளும் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு சிண்டா பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கல்வி மற்றும் நிதியளவில் மட்டும் அல்லாமல் பிற வழிகளிலும் இந்திய சமூகத்திற்கு உதவ பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்,” என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரா. அன்பரசு.