கண் பார்வையற்ற மூதாட்டி ஒருவரை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உதவி செய்ததைக் காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. இங்கு பாடுபட்டு உழைக்கும் ஓர் ஊழியர் இங்குள்ள சிங்கப்பூரருக்கும் பரிவு காட்டியதை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 23ஆம் தேதியன்று) காலை 8 மணி வாக்கில் கேல்டிகாட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த ஸ்டாம்ப் செய்தித்தள வாசகர் ‘லவி’, கண்பார்வையற்ற மூதாட்டி ஒருவரை அந்த ஊழியர் கைப் பிடித்து நடைமேடை வழி அழைத்து சென்றதைக் கண்டார். இந்தக் காட்சியைத் தமது கைப்பேசியால் படம் எடுத்த லவி, இதனைக் காணும்போது நெகிழ்ந்ததாகக் கூறினார். “எங்களது வீடுகளைக் கட்டுபவர்கள் இவர்கள்தான் என எண்ணும்போது அதிர்ஷ்டம் அடைவதாக எண்ணுகிறேன்,” என்று அவர் கூறினார்.