சாங்கி வர்த்தகப் பூங்காவில் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் வேலை செய்வதால் ஒரு சிலர் அதனை “சென்னை வர்த்தக பூங்கா” என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாண்டின் முதற்பாதியில் 11, 350 பேர் வேலை இழந்த நிலையில் இத்தகைய பேச்சு பலரின் கோபத்தைத் தூண்டலாம். சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ளோரில் 1.64 மில்லியன் பேர் வெளிநாட்டினர். இவர்களில் 190,000 பேர் ‘எம்பிளாய்மண்ட்-பாஸ்’ அனுமதி அட்டைகளையும் 189,000 பேர் எஸ்-பாஸ் அட்டைகளையும் கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரர்களைப் புறக்கணித்து பிற நாட்டவரைப் பணியில் அமர்த்தும் வழக்கத்திற்கு எதிரான குறைகூறல்களும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வலுத்துள்ளன. இந்த விவகாரம் குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிங்கப்பூரில் அளவுக்கு அதிகமான வெளிநாட்டினர் தங்கி வருவதாக சிலர் நினைக்கலாம் என துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் சுட்டினார். சில துறைகளில் சிங்கப்பூர் தனது திறன்களை இன்னும் வளர்த்துக்கொண்டிருப்பதாக திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூரருக்கும் வெளிநாட்டு திறனாளர்களுக்கும் இடையிலான இந்த இடைவெளியை தற்போதைய கிருமிப்பரவல் மேலும் வெளிச்சமிடுகிறது. வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்கள், தங்களது வேலைகளுக்காக வெளிநாட்டினருடன் போட்டி போட்டுக்கொள்ளவேண்டிய சூழலில் இருப்பதை உணர்கின்றனர்.
வெளிநாட்டுத் திறனார்களுடன் வேலைகளுக்காக சிங்கப்பூரர்கள் போட்டிப் போடும் சூழல் புதிதல்ல. வெளிநாட்டுத் திறனாளர்களை ஊழியரணியில் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நடப்பில் உள்ளது. “ஆயினும், பொருளியல் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது வெளிநாட்டினருக்கு எதிரான மனப்போக்கு வளர ஆரம்பிக்கிறது. ” என்று தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் கெவின் சியா தெரிவித்தார்.
பொருளியல் வளரும்போது அந்த வளர்ச்சியால் வெளிநாட்டினர் ஆதாயம் அடைவதை பெரும்பாலான மக்கள் எதிர்க்கவில்லை என்றும் பொருளியல் மந்தமடையும்போதுதான் சொந்த மக்களா அல்லது பிற நாட்டவரா என்ற பாகுபாடு மேலும் அதிகமாவதாக எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் வால்டர் தெசேரா தெரிவித்தார்.
அனைத்துலக வர்த்தகங்களை ஈர்க்கவும் போட்டித்தன்மையுடன் திகழவும் சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டுத் திறனாளர்கள் இருப்பது அவசியமே. அத்துடன் மிகப் பெரிய நிலைகளில் உள்ள நிர்வாகப் பொறுப்புகளுக்கும் வெளிநாட்டுத் திறனாளர்கள் தேவை என்று பீப்பிள் வர்ல்ட்வைட் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லியோங் தெரிவித்தார். இருந்தபோதும், சிங்கப்பூரர்களின் கல்வித்தகுதி காலப்போக்கில் வெகுவாக அதிகரித்து வருவதால் இத்தகைய உயர் பொறுப்புகளையும் அதிக சிங்கப்பூரர்கள் வகிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
திறன் அடிப்படையில் சிங்கப்பூர் சமுதாயம் இயங்குகிறது என அழுத்தமாக நம்பும் சிங்கப்பூரர்கள், வெளிநாட்டினருக்கு பாரபட்சம் கொடுக்கப்படுவதை அறிந்து கோபப்படத்தான் செய்வார்கள் என்று தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமுக அறிவியல் நிபுணர் டான் எர்ன் சர் தெரிவித்தார். கடுமையாக இருக்கும் சிங்கப்பூரின் கல்வி முறையையும் தேசிய சேவையையும் கடக்க வேண்டிய சிங்கப்பூரர்களுக்கு இந்தப் பாரபட்சம் நியாயமாக இல்லை என எண்ணுவதாகவும் கூறினார்.
வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பிலான கொள்கைகள் குறித்து அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள முடிவுகளில் இ பாஸ் மற்றும் எஸ் பாஸ் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தின் உயர்த்துதலும் ஒன்று. இருந்தபோதும் நீண்ட காலத்திற்கு சிங்கப்பூரில் திறன் வளர்ப்பு ஓயாமல் தொடரவேண்டும் என்றும் வெளிநாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து இணைப்புகளை வளர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.