ஒன்றிணைந்து வலிமையுடன் மீண்டெழுவதற்கான சிங்கப்பூர் கலந்துரையாடல் தொடர் இதுவரை ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ், மாண்டரின், மலாய் ஆகிய மொழிகளிலும் அந்நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இத்துடன் உடற்குறை உள்ளோரும் கலந்துரையாடல்களில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து உள்ளார்.
வலிமை பெற்று மீண்டெழுவதற்கான கலந்துரையாடல் அனைவரையும் உள்ளடங்கியதாக இருக்கும் என்று வலிமையுடன் மீண்டெழுவதற்கான பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லீ உறுதி அளித்தார்.
“கலந்துரையாடல்களுக்கு தாமாக முன்வந்து பதிவு செய்யாத சமூகத்தினரைச் சென்றடைவதற்கான வழிவகைகள் காணப்படும். உடற்குறையுள்ளோரை பங்கேற்கச் செய்யும் நடவடிக்கைகளும் அதனுள் அடங்கும்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்று நிறைவுற்ற பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசினார்.
“கலந்துரையாடல்களில் பங்கேற்போரிடம் இருந்து யோசனைகள் பெறப்பட்டு அவற்றுக்குச் செயல்வடிவம் தர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
கொவிட்-19 கொள்ளைநோயின் நீண்டகாலத் தாக்கத்தைச் சமாளிப்பதில் சிங்கப்பூருக்கு உதவும் நோக்கில் 17 உறுப்பினர்களைக் கொண்ட வலிமையுடன் மீண்டெழுவதற்கான பணிக்குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது.அதன் முதற்கட்ட பரிந்துரைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் வருங்காலப் பொருளியல் மன்றத்திடம் பகிர்ந்துகொள்ளப்படும்.
யோசனைகள், தீர்வுகள்: இந்திராணி ராஜா அழைப்பு
இதற்கிடையே, இக்கலந்துரையாடல்களில் பகிரப்படும் கருத்துகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்ச ருமான இந்திராணி ராஜா தெரிவித்தார். குறிப்பாக, நடப்பில் உள்ள கொள்கை நிலைகளிலிருந்து மாறுபட்டிருக்கும் கருத்துகள் கவனிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
“கருத்துகளுக்குச் செவிமடுத்து ஒருவரோடு ஒருவரை கலந்து பேசச் செய்யும் நடைமுறை முக்கியமானது. ஒரு சமூகமாக நாம் விரும்பும் எதிர்காலம் பற்றிய பொதுவான புரிந்துணர்வை அதன் மூலம் எட்டலாம். கலந்து பேசுவதோடு மட்டும் நில்லாமல் யோசனைகளைத் தெரிவித்து அவற்றைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளிலும் சிங்கப்பூரர்கள் பங்கேற்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.
“செயல்பாட்டுக்கான கட்டமைப்பு கள் உருவாக்கப்படுவதால் யோசனைகளையும் தீர்வுகளையும் தெரிவிக்க பலரும் முன்வருவார்கள் என எதிர்பாக்கிறோம்,” என்றார் குமாரி இந்திராணி.