சிங்கப்பூரின் உள்ளூர் பயணத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட $100 பயண பற்றுச்சீட்டு குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் பொதுமக்களிடம் பேசியது. சுமார் 25 பேர் பல்வேறு சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பதில் தரப்பட்டுள்ளது. இணையத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் பற்றுச்சீட்டை பதிவிறக்கம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கான உதவி குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மின்னிலக்க அலுவலகத்துடனும் மக்கள் கழகத்துடனும் சிங்கப்பூர் பயணத்துறை இணைந்து பணியாற்றும் என்றும் விவரங்கள் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக அந்தக் கடிதம் நவம்பர் மாதம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பற்றுச்சீட்டின் செல்லுபடி காலம் எப்போது வரை என்று கேட்கப்பட்டதற்கு, அடுத்த ஆண்டு ஜூன் வரை அதாவது வரும் டிசம்பர் தொடங்கி ஏழு மாதங்களுக்கு இதற்கான திட்டம் நடப்பில் இருக்கும் என்று விளக்கப்பட்டு உள்ளது.
‘சிங்கப்பூரீடிஸ்கவர்ஸ்’ என்னும் அந்தப் பற்றுச்சீட்டை உணவகங்களிலும் கடைகளிலும் பயன்படுத்தலாமா என்று ஒரு வினாவும் வந்துள்ளது. குறைந்தபட்சம் 30 விழுக்காடு வெளிநாட்டினர் வருகை தரக்கூடிய சுற்றுப்பயணக் காட்சிகளுக்கும் உரிமம் பெற்ற ஹோட்டல்களில் அறைகளை பதிவு செய்வதற்கும் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது.