ஆண்டிறுதி பருவத் தேர்வுகள் தொடங்க இருக்கும் வேளையில் அதற்குத் தயாராகும் பிள்ளைகளிடம் யதார்த்தமாக நடந்துகொள்ளுமாறு பெற்றோரை அனுபவம்பெற்ற கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மனஉளைச்சல் குறைவதோடு தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற கைகொடுக்கும் என்கின்றனர் அவர்கள்.
அத்துடன், பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம் என்பதற்கான குறிப்புகள் சிலவற்றையும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். பாடங்களைத் திருப்பிப் பார்ப்பதற்கான திட்டத்தை வகுக்குமாறு பிள்ளைகளைப் பெற்றோர் கேட்டுக்கொள்ளலாம். அதன் மூலம் பிள்ளையின் பலம், பலவீனத்தைப் புரிந்துகொண்டு தேர்ச்சிக்கான இலக்கை நிர்ணயிக்க உதவும் என தேசிய கல்விக் கழக விரிவுரையாளர் சாண்ட்ரா ஊ தெரிவித்தார்.
ஒரு மாணவரின் படிப்பு, ஓய்வு, உணவு மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கான நேரத்தை சமமாக ஒதுக்குவதே தேர்வுக்குப் படிப்பதற்குரிய சரியான அட்டவணையாக அமையும் என்றும் இதன் மூலம் ஒட்டுமொத்த பதற்றத்தைத் தணிக்க அது உதவும் என்றும் அவர் கூறினார். இத்துடன், படிப்பதற்கான நல்ல சூழல், போதுமான உடற்பயிற்சி மற்றும் சிறந்த சத்துணவு ஆகியனவும் அவசியம் என்றார் டாக்டர் ஊ.ஆண்டு முழுமையும் நடத்தப்பட்ட பாடங்களை திருப்பிப் பார்க்கும் பணியை சுலபமாக்கும் யோசனையை ஒன்சான்டா என்னும் இணையக் கற்றல் தளத்தின் நிறுவனர் கூ யி சியான் தெரிவித்துள்ளார்.
பாடத் தலைப்புகள் அல்லது செயல்களை பட்டியலிட்டு அவற்றைச் செயல்படுத்தும் வகையில் சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரிக்கலாம் என்றார் அவர். சில பாடங்களைப் புரிந்துகொள்வதில் பிள்ளைகள் சிரமப்பட்டால் அதற்காக அவர்களை பெற்றோர் திட்டக்கூடாது என்றும் திரு கூ கூறினார். பலதடவை சொல்லித் தந்த பின்னரும் பிள்ளைகள் புரிந்துகொள்ளாவிட்டால் பெற்றோருக்கு எரிச்சல் வருவது இயல்புதான் என்றும் அந்த எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடங்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதைச் சோதித்து அறிய பிள்ளைகளை ஓர் ஆசிரியர் போல செயல்பட வைக்கலாம் என்று திருவாட்டி மோனிகா லியோங் கூறுகிறார்.
பாடங்களில் இருந்து சில கேள்விகளைத் தயாரித்து அவற்றுக்கான விடையையும் விளக்கத்தையும் ஓர் ஆசிரியரைப்போல சொல்லுமாறு பிள்ளைகளைக் கேட்டுக்கொள்ளலாம் என்கிறார் ‘சூப்பர்ஸ்டார் டீச்சர்’ என்னும் இணையக் கற்றல் தளத்தின் கல்விக் குழு தலைவரான திருவாட்டி மோனிகா.