சிங்கப்பூர், ஆஸ்திரேலிய கடற்படையினர் தங்களுக்கு இடையிலான இருதரப்புப் பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கினர்.‘எக்சர்சைஸ் சிங்காரு’ என்னும் அந்தக் கூட்டுப் பயிற்சி தென்சீனக் கடலின் தெற்கு வட்டாரத்தில் தொடங்கியது. இது இரு நாடுகளுக்கு இடையிலான 25 வது ஆண்டு கடற்பயிற்சி.
கொவிட்-19 சூழல் காரணமாக இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர் சந்தித்து பயிற்சியில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு உள்ளதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. பயிற்சியின்போது இரு நாட்டு கடற்படையினரும் துப்பாக்கி சுடுதல், தந்திரமுறைப் பயிற்சி, நீருக்கடியிலான பயிற்சி, ஆகாய தற்காப்புப் பயிற்சி, தகவல் தொடர்பு பயிற்சி, போர்த்திறன் பயிற்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
இன்று திங்கட்கிழமையுடன் முடிவுறும் பயிற்சிக்கு சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை மூன்று விமானங்களைத் தந்து உதவும்.
“எக்சர்சைஸ் சிங்காரு என்பது சிங்கப்பூர், ஆஸ்திரேலிய கடற்படையினருக்கு இடையிலான பயனுள்ள தளமாக விளங்குகிறது.
“கடல், கடலடி, ஆகாயம் ஆகியவற்றிற்கு இடையிலான உயர்மட்ட பயிற்சிகளை மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது,” என்று சிங்கப்பூர் குடியரசு கடற்படை அதிகாரி ஹோ ஜீ கியன் கூறினார்.
“இந்த 25வது ஆண்டு பயிற்சியைத் தொடர்ந்து இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான அணுக்க ஒத்துழைப்பும் தோழமையும் இனி வரும் பல்லாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்ப்போம்,” என்றார் அவர்.