இந்தோனீசியப் பணிப்பெண் 24 வயது குமாரி சுலிஸ் செத்யோவதியைப் பலமுறை துன்புறுத்தியதை 31 வயது பெண் முதலாளி நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்டுள்ளார். நூர் அவுடாடி யூசுப்பின் வன்செயல்களைத் தாங்க முடியாமல் அந்தப் பணிப்பெண், தாம் பணியாற்றிய 15ஆவது மாடி வீட்டிலிருந்து தரைத்தளத்திற்கு இறங்கினார்.
இந்தக் குற்றங்கள் நடந்துகொண்டிருந்தபோது நூர் சிங்டெலில் பணிபுரிந்தார். ஆறு முறை வன்செயல்களில் ஈடுபட்டதை சிங்கப்பூரரான நூர் ஒப்புக்கொண்டார். நூருக்கு தண்டனை விதிக்கப்படும்போது மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி சுலிஸ். தொடக்கத்தில் மற்றொரு வீட்டில் வேலை பார்த்தார். அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அவர் நூர் வீட்டில் பணிபுரிந்தார். அவரது மாதச்சம்பளம் 580 வெள்ளியாக இருந்தது. அந்தப் பணிப்பெண் தனது மகளுக்கு தைலம் தடவ மறந்ததால் நூர், கோபமடைந்து அவரது முகத்தில் உமிழ்ந்து இரு முறை அறைந்தார். மற்றொரு சமயத்தில் நூர் கூர்மையான சீப்புகளைக் கொண்டு திருவாட்டி சுலிஸைக் காயப்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய வன்கொடுமை பிப்ரவரி 2018 வரை தொடர்ந்தது. இதனைத் தாங்க முடியாமல் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈசூன் வட்டாரத்திலுள்ள அந்த அடுக்குமாடி வீட்டின் மாடத்திலிருந்து கீழே இறங்கினார். திருவாட்டி சுலிஸ் வெளியேறாமல் இருக்க நூர் வீட்டுக் கதவைப் பூட்டினார்.
தப்பித்துவந்த அந்தப் பணிப்பெண், பின்னர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் சென்று வெட்டு மட்டும் சிராய்ப்புக் காயங்களுக்காக சிகிச்சை பெற்றார். 10,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ள நூருக்கான தண்டனை நவம்பர் 18ஆம் தேதி விதிக்கப்படும்.