சிங்கப்பூரில் அக்டோபர் 1 முதல் புதிய குடிநுழைவு, சோதனைச்சாவடி இணையச் சேவை (e-Service) அறிமுகமாகிறது. அந்தச் சேவையைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பு முகவரிகளை மாற்றிக்கொள்ளலாம்.
முகவரியை மாற்ற விரும்புவோர் அக்கம்பக்க போலிஸ் சாவடிக்கோ அக்கம்பக்க போலிஸ் நிலையத்திற்கோ டிசம்பர் 1 முதல் செல்ல முடியாது.
விண்ணப்பதாரர்கள் தங் களுடைய சிங்பாஸ் மூலம் இந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படிச் செய்வோருக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அஞ்சல் மூலம் புதிய முகவரிக்கு ரகசிய எண் ஒன்று அனுப்பப்படும்.
அந்த எண்ணைப் பயன்படுத்தி புதிய முகவரியை உறுதிசெய்யும்படி விண்ணப்பதாரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். அவர்கள் அப்படி செய்ததும் அதற்கான உறுதிக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். பிறகு புதிய முகவரி ஒரு நாளில் எல்லா அரசாங்க அமைப்புகளின் கணினித் தகவல் வளங்களில் சேர்க்கப்படும்.
புதிய முகவரியைத் தெரிவிக்கும் ஒட்டுத் தாள் ஒன்றுடன் கூடிய இரண்டாவது கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு வரும். அதில் கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் தங்கள் அடையாள அட்டைக்குப் பின்புறத்தில் அந்த முகவரித் தாளை ஒட்டிக்கொள்ள வேண்டும்.
தேசிய பதிவுச் சட்டத்தின்படி அடையாள அட்டை வைத்திருப்போர் அனைவரும் முகவரி மாற்றத்தைப் பற்றி 28 நாட்களுக்குள் அதிகாரிகளிடம் தெரியப்படுத்திவிட வேண்டும்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தொடங்கி இருக்கும் புதிய இணையச் சேவை தமிழ், ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் கிடைக்கும்.
இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் உதவிக்காக இந்த ஆணையத்தை அணுகலாம். புதிய சேவையை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.