வாழ்வில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்றும் பத்திரமாக சொந்த நாடு திரும்ப வேண்டும் என்றும் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது தெரிய வந்ததும் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட இந்திய ஊழியர் அழகு பெரியகருப்பனின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.
2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்த திரு அழகு பெரியகருப்பனுக்குக் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று கூ தெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட விஷயம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.
ஐந்து நாட்கள் கழித்து, ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை அவர் தமது கைபேசியில் இரண்டு காணொளிகளைப் பதிவு செய்தார். அதில் தாம் செய்யப்போவதைப் பற்றி தெரிவித்தார்.அதையடுத்து சன்னல் கண்ணாடியை அகற்றி மாடியிலிருந்து குதித்து மாண்டார்.
திரு அழகு பெரியகருப்பன் உயிரை மாய்த்துக்கொண்டதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மரண விசாரணை அதிகாரி கமலா பென்னம்பலம் தீர்ப்பளித்தார்.
திரு அழகு பெரியகருப்பனின் மனைவியும் மூன்று மகள்களும் இந்தியாவின் அந்தமான் தீவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கின்றனர்.
திரு அழகு பெரியகருப்பன் தமது உயிரை மாய்த்துக்கொண்ட விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் அவர்கள் மீளாத் துயரத்தில் அவதிப்படுகின்றனர்.
“அவர் ஏன் இப்படி செய்தார் என்று எங்களுக்குப் புரியவில்லை. பாசமான கணவராகவும் தந்தையாகவும் அவர் இருந்தார்,” என்று தி நியூ பேப்பர் நாளிதழிடம் திரு அழகு பெரியகருப்பனின் மனைவி திருவாட்டி ஏ. பாஞ்சாலி, 40, தெரிவித்தார்.
அவரது மூத்த மகளும் (16 வயது) இரண்டாவது மகளும் (11 வயது) சொல்லொண்ணா சோகத்தில் வாடுவதாக அவர் கவலையுடன் தெரிவித்தார். கடைசி மகளுக்கு 6 வயது ஆகிறது என்றும் தமது குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடுமையை அவரால் உணர முடியவில்லை என்றும் திருவாட்டி பாஞ்சாலி கூறினார்.
திரு அழகு பெரியகருப்பன் எடுத்த விபரீத முடிவு அவரது மூன்று மகள்களையும் அடுத்த பல ஆண்டுகளுக்குப் பெருமளவில் பாதிக்கும் என்று தி நியூ பேப்பர் நாளிதழிடம் உளவியல் நிபுணர் கேரல் பேல்ஹெட்செட் தெரிவித்தார்.
“பொதுவாக தங்கள் தாய் அல்லது தந்தை உயிரை மாய்த்துக்கொண்டால் சிறு பிள்ளைகள் தங்களையே குறைகூறிக்கொள்வர்,” என்றார் அவர்.
திரு அழகு பெரியகருப்பனின் மகள்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றார் அவர்.