விமான மகிழ் உலா திட்டத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) கைவிட்டுள்ளது. அத்தகைய பயணங்கள் சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் என அதிருப்திக் குரல்கள் எழுந்ததை அடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க மூன்று திட்டங்களை அது அறிமுகப்படுத்த இருக்கிறது. இவை அடுத்த சில வாரங்களில் தொடங்தகும் என்று தெரிவிக்கப்பட்டது. A380 ரக விமானங்களை உணவகங்களாக மாற்றியமைக்க அது தீர்மானித்துள்ளது.
A380 ரக விமானங்களை உணவகங்களாக மாற்றியமைத்தல், சிங்கப்பூர் ஏர்லைன்சின் பயிற்சி மையங்களில் பொதுமக்களுக்கு சுற்றுலா நடத்துவது, சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதல் மற்றும் ‘பிஸ்னஸ்’ வகுப்புப் பயணிகளுக்குப் பரிமாறப்படும் உயர்தர உணவுவகைகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்வது ஆகிய திட்டங்களை விரைவில் தொடங்கவிருக்கின்றன.
இந்தத் திட்டம் மூலம் சுற்றுப்புறத்துக்கு பாதிப்பும் ஏற்படுமா என்றும் நிதி தொடர்பாக சாத்தியப்படுமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்திய பிறகு இவற்றை நடத்த முடிவெடுத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
விமான மகிழ் உலாக்களை நடத்த முதலில் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அது சாத்தியமில்லை என்று ஆய்வில் தெரிய வந்ததும் அதைக் கைவிட்டதாகவும் அது கூறியது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்தப் புதிய திட்டங்கள் வகை செய்யும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்சின் தலைமை நிர்வாகி கோ சூன் ஃபோங் தெரிவித்தார்.
“வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க நாங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து கடந்த சில வாரங்களில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆலோசனை, பரிந்துரைகள் தந்த அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று திரு கோ கூறினார்.
இந்தப் புதிய திட்டங்களில் விருப்பம் உள்ளவர்கள் KrisShop இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு திட்டத்துக்கான விலை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த மாதம் 24ஆம், 25ஆம் தேதிகளில் சாங்கி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A380 ரக விமானம் உணவகமாக மாற்றியமைக்கப்படும். முன்பதிவு அடுத்த மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது.