முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினர் ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகளுடன் கிட்டத்தட்ட மக்கள்
தொகையில் பாதி பேருக்கு மெடிஷீல்ட் லைஃப் சந்தாத் தொகையில் 50 விழுக்காடு வரை கழிவு வழங்கு வதை அரசாங்கம் தொடரும்.
இவை நிரந்தர சந்தாத் தொகை கழிவுகள்.
அதனுடன் சேர்த்து, சந்தாத் தொகை உயர்வை ஈடுசெய்ய சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு கொவிட்-19 மானியம் வழங்கப்படும்.
தற்போதைய மானியங்களுடன் சேர்த்து, முதல் ஆண்டில் சந்தாத் தொகை உயர்வில் 70 விழுக்காட்டை இந்த மானியம் ஈடுசெய்யும். இரண்டாம் ஆண்டில் சந்தாத் தொகை உயர்வில் 30 விழுக்காட்டை இந்த மானியம் ஈடுசெய்யும்.
மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் அடுத்த ஆண்டிலிருந்து விரிவாக்கப்படும்.
உயர்வான மருத்துவமனைக் கட்டணங்களைச் செலுத்துவதற்குக் கூடுதல் வழங்கீடுகள் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் பயன்படுத்தக்கூடிய வழங்கீடுகளுக்கான உச்ச
வரம்பை $100,000லிருந்து $150,000க்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் அனுகூலங்களையும் அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளையும் ஈடுசெய்ய சந்தாத் தொகை அடுத்த ஆண்டு 35 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, 51 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்ட
ஒருவர் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை $630 மெடிஷீல்ட் லைஃப் சந்தாத் தொகை செலுத்துகிறார். சந்தாத் தொகை உயர்த்தப்பட்டதும் அவர் ஆண்டுக்கு $800 செலுத்த வேண்டும்.
மாதாந்திர சராசரி வருமானமாக $1,200க்கும் குறைவாக ஈட்டும் சிங்கப்பூரராக இருந்தால் அவருக்கு சந்தாத் தொகையில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும். அவர் ஆண்டுக்கு தற்போது $441
செலுத்துகிறார்.
மாதாந்திர சராசரி வருமானம், வயது, வீட்டின் வருடாந்திர மதிப்பு ஆகியவை கழிவுத் தொகையை நிர்ணயிக்கும்.
சந்தாத் தொகைக்கான கழிவுக்குப் பிறகு கொவிட்-19 கழிவு வழங்கப்படும்.
ஆகையால் அடுத்த ஆண்டு அவர் $477 செலுத்த வேண்டும். இது தற்போதைய தொகையைவிட $36 வெள்ளி அதிகம். அவரது வயதினருக்கான சந்தாத் தொகை $170 அதிகரித்தாலும் அவர் அதைவிடக் குறைவாகச் செலுத்துவார்.