தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த பயன்படுத்தப்படும் மெடிஷீல்ட் லைஃப் வழங்கீட்டுத் தொகையை அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலிருந்து 35 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்குக் குறைக்க மெடிஷீல்ட் லைஃப் மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த மாற்றத்தால் ஏழு காப்புறுதித் திட்ட நிறுவனங் களால் வழங்கப்படும் தனியார் ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம் பாதிப்படையக்கூடும்.
அரசாங்க மருத்துவமனைகளில் கட்டணக் கழிவு பெற்ற வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்தின் முக்கியப் பங்கு.
இந்நிலையில், அரசாங்க மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களும் ஒரே மெடிஷீல்ட் லைஃப் சந்தாத் தொகையைச் செலுத்துகின்றனர்.
ஆனால் அரசாங்க மருத்துவமனைக் கட்டணத்தைவிட தனியார் மருத்துவமனைக் கட்டணம் மிகவும் அதிகம்.
இதனால் வசதியுள்ள நோயாளிகளின் உயர்வான தனியார் மருத்துவமனைக் கட்டணத்துக்கான சந்தாத் தொகையையும் சேர்த்து வசதி குறைந்த நோயாளிகள் செலுத்த வேண்டியதாகிவிடுகிறது.
இதைச் சரிசெய்ய தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் பயன்படுத்தக்கூடிய மெடிஷீல்ட் லைஃப் வழங்கீட்டை 25 விழுக்காட்டுக்குக் குறைக்க மன்றம் முடிவெடுத்துள்ளது.