ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொள்முதல் ஆணை மோசடி தொடர்பில் 11 புகார்கள் வந்ததாகவும் $749,000 மதிப்புள்ள பொருட்கள் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்காரர்கள் அரசாங்க அமைப்புகள் மற்றும் உள்ளூர் பல்
கலைக்கழகங்களைப் போல போலியாக செயல்பட்டு நிறுவனங்களை ஏமாற்றியதாகத் தெரிய வந்துள்ளது.
பொருட்களை வாங்குவதுபோல பாசாங்கு செய்யும் மின்மடல்களை மோசடிக்காரர்கள் அனுப்புவார்கள்.
மின்னியல் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சாதனங்கள் ஆகியவற்றோடு ஒளிக்கற்றை படக்கருவிகள் தொடங்கி இதயத்துடிப்பு மீட்பு சாதனம் வரையிலான மருத்துவப் பொருட்களின் விலைகளைக் கேட்கும் மின்மடல்கள் அவை.
விலைகள் ஏற்கப்பட்டு, வியாபார உடன்பாடு ஏற்பட்டதும் கொள்முதல் ஆைணையை (பிஓ) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்புவார்கள். பொருட்களை வாங்குதற்கான தொகை எதுவும் அனுப்பப்படாது.
இந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கிய அதிகாரிகள் பொருட்கள் விநியோகிக்கப்படும் முகவரிகள் மோசடிக்காரர்கள் சம்பந்தப்பட்ட சரக்கு அனுப்பும் நிறுவனங்கள் என கண்டறியப்பட்டது.
பிரிட்டன், நைஜீரியா போன்ற நாடுகளுக்கு பொருட்களை அனுப்பக்கூடியவை அவை.
இதுபோன்ற மோசடிகளின் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று போலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வியாபாரம் தொடர்பில் வரும் மின்மடல்கள் மீது சந்தேகம் எழுந்தால் அவற்றின் அதிகாரத்துவ ‘டொமைன்’ பெயரை சரிபார்க்குமாறு போலிஸ் வலியுறுத்துகிறது.
மோசடிக்காரர்கள் அரசாங்க அமைப்புகள் மற்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்களைப் போல தோன்றும் போலி ‘டொமைன்’ பெயர்களைப் பயன்படுத்துவர்.
உதாரணத்திற்கு, procurement@moegovt-sg.com மற்றும் purchasing @nus-edu.org போன்றவாறு அவை இருக்கும். இவை போலியானவை.
விசாரிப்புகளின் உண்மைத்தன்மையை வியாபார, வர்த்தக நிறுவனங்கள் சோதித்து அறியவேண்டும்.
மேலும், மின்மடல் முகவரிக்குப் பதிலளிப்பதைவிட, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளின் அதிகாரத்துவ எண்களில் அத்தகைய விசாரிப்புகளை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் மின்மடல் முகவரிகளில் சின்னச் சின்ன இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இருப்பதை உற்று கவனித்தால் தெரியும்.
பொருட்களை விநியோகிக்க தரப்பட்டு இருக்கும் தனியார் வீடுகள், சரக்கு அனுப்பும் நிறுவனங்கள் அல்லது சரக்கு சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் முகவரியை சரிபார்ப்பதும் அவசியம் என்றும் போலிசார் தெரிவித்து உள்ளனர்.
மோசடி தொடர்பான விழிப்புநிலை தகவல்களைப் பெற www.scamalert.sg என்னும் இணையப் பக்கத்தையோ 1800-722-6688 என்னும் மோசடித் தடுப்பு நேரடி தொலைபேசி எண்ணையோ பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.