கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டமான கடந்த மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக செங்காங்கில் உள்ள வீவக வீடு ஒன்றில் ஒன்றுகூடியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இருவருக்கு தலா $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மோய் காய் யி, 19, கவின் லியோவ் ஜுன் ரோங், 20, ஆகிய இருவருக்கும் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் அந்தத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் செலுத்துவதை தேர்வுசெய்துள்ளனர்.
இன்னோர் இளைஞரான தான்ட் தாவ் காங், 19, என்பவருக்கு நீதிமன்றம் ஒன்பது மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டுள்ளது. இவ்வகையில் இவர் 40 மணி நேர சமூக சேவையில் ஈடுபட வேண்டும். இந்த இளைஞர் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அவரது பெற்றோர் பிணைத்தொகை $5,000 செலுத்தியுள்ளனர்.
நேற்று அபராதம் விதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும் செங்காங், புளோக் 295சி காம்பஸ்வேல் கிரசெண்ட் முகவரியில் 18 பேர் சட்டவிரோதமாக ஒன்றுகூடியவர்களில் அடங்குவர். இந்த சட்டவிரோத ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திய இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு முன்னதாக அபராதம் விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 11ஆம் தேதி, வீட்டு உரிமையாளரான லியோங் சீ முன், 37, என்பவருக்கும் நிகழ்ச்சியை நடத்தியவரும் லியோங்கின் முன்னாள் காதலியுமான கேசி ஓங் ஷி ஹோங், 32, என்பவருக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட 21 வயது முதல் 32 வயது வரையிலான 10 பேருக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தலா $2,500 முதல் $3,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்ட தற்காலிக சட்டத்தின்படி சாற்றப்பட்ட குற்றங்களை 15 பேரும் ஒப்புக் கொண்டனர்.
நோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டமான ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை சிங்கப்பூரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் மற்றபடி தங்களின் வீட்டை விட்டு வெளியேறவோ பிறரைச் சென்று சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சட்டத்தை மீறி மே 8ஆம் தேதி காலை 6 மணிக்கு செங்காங்கில் உள்ள லியோங்கின் வீட்டிற்கு இரண்டு விருந்தினர்கள் வருகை தந்ததோடு அங்கு காலை உணவை உண்டனர். அவர்களைத் தொடர்ந்து அன்றிரவு 9 மணிக்கு மற்ற விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வருகை தந்தனர். இது குறித்து அண்டை வீட்டார் மே 9ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு போலிசுக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு போலிஸ் அதிகாரி சார்ஜண்ட் ராய் டான் அந்த வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினார். ஆனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை.
பின்னர் கதவை பலமுறை தட்டியபின் வீட்டுக்குச் சொந்தக்காரரான லியோங் மட்டும் குரல் கொடுத்தார். தூங்கிக்கொண்டிருப்பதாக அவர் கூறியதும், வீட்டிற்குள் நீங்கள் போடும் சத்தம் வெளியில் கேட்கிறது என்றார் போலிஸ் அதிகாரி.
அதனையடுத்து லியோங், தங்கள் வீட்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை ஒத்துக்கொண்டார். உள்ளே சென்று சோதனையிட்ட போலிசார் அங்கு ஏராளமானோர் ஒன்றுகூடியிருந்ததைக் கண்டனர்.
இந்த வழக்கில் ஜேஸ்பர் டான் ஷி ஹோங், 25, மண்டி டான் யி ஸிங், 26, சுவா ஜி குன், 29, ஆகிய மூன்று பேரின் வழக்கு நிலுவையில் உள்ளது.