பெண் போலிசுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 34 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து குற்றம் தொடர்பில் வாட்ஸ்அப் வழியாக போலிஸ் அனுப்பிய தகவலுக்கு பதிலளித்த முகம்மது இத்ரிஸ் கைருதின் என்னும் அந்த சிங்கப்பூரர், நீங்கள் போக்குவரத்து போலிசாக இருந்தால் அதற்கென்ன,” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மே 29ஆம் தேதி இத்ரிஸுக்கு போக்குவரத்து போலிஸ் ஆய்வாளரான அந்தப் பெண் ஒரு நினைவூட்டல் அனுப்பி இருந்தார்.
போக்குவரத்துக் குற்றங்களுக்குச் செலுத்தவேண்டிய அபராதத் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்துமாறு கூறியது அத்தகவல். அைவ எத்தகைய குற்றங்கள் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. அந்தத் தகவலுக்குப் பின்னிரவில் பதிலளித்த இத்ரிஸ் அடையாளம் தெரியாத பெண்ணின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட இரண்டு படங்களை சேர்த்து அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி செங்காங் அக்கம்பக்க காவல் நிலையத்தில் அந்தப் பெண் போலிஸ் அதிகாரி புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலிசார் அன்று இரவே இத்ரிஸை ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் உள்ள புளோக் 670ஏ-ல் கைது செய்தனர். அவரிடமிருந்த கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடமையில் ஈடுபட்டு இருக்கும் அரசாங்க ஊழியர்களை துன்புறுத்தும் எந்தவொரு செயலையும் சகித்துக்கொள்ள இயலாது என்றும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் போலிஸ் தனது அறிக்கை யில் கூறியுள்ளது. துன்புறுத்தல் குற்றத்துக்கு தண்டனை ஓராண்டு வரையிலான சிறை, $5,000 வரையிலான அபராதம்.