ஒருசில பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வருவோரின் எண்ணிக்கை 250க்கு உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் அக்டோபர் 7 முதல் இங்குள்ள 19 பள்ளிவாசல்கள் தங்களின் அன்றாட கூட்டுத் தொழுகைக்கான எண்ணிக்கையை 50லிருந்து 100 ஆக உயர்த்தவுள்ளன.
கொவிட்-19 சூழல் சற்று மேம்பட்டுள்ள நிலையில் மூத்த குடிமக்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கூறியுள்ளது. முன்னதாக பொதுமக்களின் வருகைக்காக பள்ளிவாசல்கள் ஜூன் மாதத்தில் மீண்டும் திறந்தபோது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருவதைத் தவிர்த்துவிடுமாறு முயிஸ் அறிவுறுத்தியது.
இதையடுத்து மெய்நிகர் ஊடகச் சந்திப்பில் புதிய ஏற்பாடுகள் குறித்து நேற்று பேசினார் முயிஸ் தலைவர் இசா மசூத்.
தற்போது வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஒவ்வொரு வாரமும் 15,000 இடங்களை 64 பள்ளிவாசல்களிலும் முயிஸ் வழங்கி வருகிறது. இதை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இணைய முன்பதிவு செய்த பின்னரே முஸ்லிம்கள் தொழுகைக்குச் செல்ல முடியும்.
சில பள்ளிவாசல்களில் 250 பேர் தொழுகைக்குக் கூடும் முன்னோட்டத் திட்டம் தொடங்கவுள்ளது.