கொவிட்-19 நோய்ப் பரவல் சிங்கப்பூரைப் பாதித்த வேளையில், இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வாக்களிக்கச் சென்றபோது, வேலைகளும் வாழ்க்கைச் செலவுகளுமே சிங்கப்பூரர்களின் மனதில் முக்கியமானதாக நிலைத்திருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இளைய மற்றும் நல்ல கல்வி கற்ற வாக்காளர்களிடையே அரசியல் பன்முகத்தன்மையும் முக்கியமாகக் கருதப்பட்டது என்று பொதுத் தேர்தல் 2020க்கு பிந்திய கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனைத்து வயதுப் பிரிவினர் இடையே, மக்கள் செயல் கட்சியின் (மசெக) நம்பகத்தன்மை சற்று சரிந்தது என்றும் அதேவேளையில் எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சியின் நம்பகத்தன்மை கூடியது என்றும் ஆய்வு கூறுகிறது. கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று இணையக் கருத்தரங்கு மூலம் தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது.
அந்த ஆய்வுக் கழகம், வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 4,027 சிங்கப்பூரர்களை வயது, பாலினம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து கேள்விகளைக் கேட்டது. அவர்கள் தங்கள் வீட்டு தொலைபேசி வழியாகவும் கைபேசி வழியாகவும் இணைய ஆய்வு வழியாகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதுபோன்ற ஆய்வுகள் 2006, 2011, 2015 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில், மக்கள் செயல் கட்சியின் மொத்த வாக்கு விகிதம், முன்னைய தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஒன்பது விழுக்காடு சரிந்து 61.24% ஆனது.
ஜூலை 10ஆம் தேதி தேர்தலில், பாட்டாளிக் கட்சி தனது இரண்டாவது குழுத் தொகுதியில், அதாவது செங்காங் குழுத் தொகுதியில் வெற்றி பெற்று தனது பலத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டது.
முன்னைய ஆய்வுகளில் கூறியதுபோல், ஆய்வில் பங்கேற்றவர்கள் 15 அம்சங்களில் முதன்மையானதாக ‘ஒரு நல்ல ஆற்றல்மிக்க அரசாங்கம் தேவை’ என்று கருத்துரைத்தனர்.
இவ்வாண்டு கேள்வி பட்டியலில் கொவிட்-19 பற்றியும் கேட்கப்பட்டது. அதில் பத்தில் ஒன்பது பேர் கொவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவது ‘மிக முக்கியம்’ அல்லது ‘முக்கியம்’ என்று வகைப்படுத்தினர்.
அதை அடுத்து மற்ற மூன்று மிக முக்கிய அம்சங்களாக மக்கள் கூறியவை, வேலை நிலவரம், வாழ்க்கைச் செலவினம், நாடாளுமன்றத்தில் வெவ்வேறான கருத்துகள் தேவை ஆகியன.
குறைந்த வருவாய் முதல் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 30 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் தொழில்நுட்பர்களாக வேலை செய்யும் 21 வயது முதல் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மேம்பட்ட அரசியல் பன்முகத்தன்மை வேண்டும் என்றனர்.
“குறைந்த வருவாய் முதல் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங் களைச் சேர்ந்தவர்கள், கொள்ளைநோயின் விளைவாக வேலை நிலவரம் பாதிப்படைந்திருப்பது தங்கள் பாதுகாப்புக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்று அச்சம் தெரிவித்தனர்,” என்றார் ஆய்வுக் குழுவில் அங்கம் வகித்த மூத்த ஆய்வாளரான டாக்டர் ஜிலியன் கோ.
சரிந்த மசெகவின் நம்பகத்தன்மை
2015 பொதுத் தேர்தலில் 93% ஆக இருந்த மசெகவின் நம்பகத்தன்மை இவ்வாண்டு தேர்தலில் 86 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
அனைத்து வயது பிரிவினர் இடையே மசெகவின் நம்பகத்தன்மை சரிந்தது. அதில் உயர்நிலை, டிப்ளோமா, குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், ஒன்று முதல் மூன்று அறை வீவக வீடுகளில் வசிப்போர், ஆண்கள் ஆகிய பிரிவினரிடையே மேலும் அதிகமான சரிவு தென்பட்டது.
ஒப்புநோக்க, பாட்டாளிக் கட்சியின் நம்பகத்தன்மை அனைத்துப் பிரிவுகளிலும் கூடியது. மசெகவுக்கு அடுத்த நிலையில் நம்பகத்தன்மை குறைந்த கட்சிகளாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகியவை குறிப்பிடப்பட்டன.
அரசியல் பழமைவாதிகள்
2015 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பொதுத் தேர்தலில், அரசியலில் பழமைவாத எண்ணமுடையோரின் விகிதம் 44.3%லிருந்து 18.5% ஆக குறைந்தது. தேர்தல் முறையில் மாற்றம் தேவையில்லை, நாடாளுமன்றத்தில் வெவ்வேறு குரல்கள் தேவையில்லை, கொள்கைகளைச் சரிபார்த்தல் தேவையில்லை என்று சொல்லிக் கொள்பவர்கள் அவர்கள்.
அரசியல் பன்முகத்தன்மையை விரும்புவர்களின் விகிதம் நான்கு விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாகி 22.4% ஆனது.
வாக்காளர் முடிவுக்கு இணையம் முக்கிய பங்களித்தது
கொள்ளைநோய் காரணமாக நேரடித் தேர்தல் பிரசாரங்கள் இல்லாத காரணத்தால் அனைவரும் இணையத்தை நாடியதால் வாக்காளர்கள் தங்கள் முடிவை நிர்ணயம் செய்ததில் இணையம் முக்கிய பங்கு வகித்தது.
அதற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெற்றவைகளாக உள்ளூர் தொலைக்காட்சி பிரசாரம், செய்தித்தாள்கள், மின்னியல் பிரசாரங்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்களின் உரையாடல்கள் என்று வகைப்படுத்தப்பட்டன.