வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடன் நிலுவைத்தொகைகளைத் தாமதமாகச் செலுத்துவதற்கான கட்டணங்களின் தற்காலிக ரத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு வீவக வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான வாடகை பாதியாகக் குறைக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
வீவக வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, வாடகையைத் தாமதமாகச் செலுத்துவதற்கான கட்டணங்களும் 2021 மார்ச் வரை நிறுத்தி வைக்கப்படும்.
கொவிட்-19 நோய்ப் பரவல், பொருளியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வீவக வீட்டுரிமையாளர்களும் வாடகைதாரர்களும் அதனை எதிர்கொள்ள உதவியாக இந்தக் கூடுதல் உதவி நடவடிக்கைகளை அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக அறிவித்துள்ளார்.
"இப்போதைய சிரமமான பொருளியல் சூழல் இன்னும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால், சில குடும்பங்கள் தங்களது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுகின்றன," என்றார் திரு லீ.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, வீவக வழங்கிய நிதியுதவி நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 2,500 குடும்பங்கள் பயனடைந்தன.
வீட்டுக்கடன் தவணைத்தொகைகளைச் செலுத்துவதைத் தள்ளிப்போடுவது, செலுத்த வேண்டிய தவணைத்தொகையின் அளவைக் குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.
"நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து, நிதிப் பிரச்சினைகளில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக எங்களது நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வோம்," என்று அமைச்சர் லீ கூறியுள்ளார்.
வங்கிக் கடன் பெற்று வீவக வீடு வாங்கியுள்ளோருக்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
நிதிப் பிரச்சினையிலுள்ள வீட்டு உரிமையாளர்கள் உதவி தேவைப்பட்டால் தங்களது வட்டாரத்தில் உள்ள வீவக கிளையை அணுகும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

