சிங்கப்பூரின் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்துக்குப் பிந்தைய இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகள் நடப்பிற்கு வந்ததை அடுத்து தனியார் வீட்டு விலைவேகமாக உயரத் தொடங்கியது.
இதன் தொடர்பில் மூன்றாம் காலாண்டில் தனியார் வீட்டு விலைக் குறியீடு 0.8% உயர்ந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னோடி புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது. ஒப்புநோக்க, இரண்டாம் காலாண்டின் தனியார் வீட்டு விலைக் குறியீடு 0.3% மட்டுமே உயர்ந்ததாக ஆணையம் கூறுகிறது.
ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வீட்டு விலைக் குறியீடு 1% வீழ்ச்சி கண்ட நிலையில் ஆணையம் வெளியிட்டுள்ள இரண்டாம், மூன்றாம் காலாண்டு விலைக் குறியீட்டுப் புள்ளிவிவரங்கள் விலையேற்றத்தை காண்பிப்பது கவனிக்கத்தக்கது.
ஆண்டு அடிப்படையில் பார்த்தால், தனியார் வீட்டு விலைக் குறியீடு 0.1% கூடியுள்ளதாக ஆணையம் கூறுகிறது. சொத்து முகவர்கள் சொத்து வாங்குவதற்கான விருப்ப உரிமைப் பத்திரத்தை ஒன்றுக்கு மேற்பட்டு பலமுறை வழங்கும் நடவடிக்கையை ஆணையம் கடந்த திங்கட்கிழமையன்று தடை செய்ததை அடுத்து இந்தப் புள்ளிவிவரங்கள் வந்திருப்பது நினைவுகூரத்தக்கது.
சிங்கப்பூர் மிக மோசமான பொருளியல் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையிலும் அதன் தொடர்ச்சியாக பலர் வேலையிழந்துள்ள நிலையிலும் நிதி நடவடிக்கைகளில் பொதுமக்கள் முன்யோசனையுடன் செயல்படும் போக்கை இது ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், சொத்து வாங்க எண்ணுவோர், தங்கள் சக்திக்கு மீறிய விலையில் சொத்து வாங்க முனைவதை ஆணையம் தடுக்க எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், கடும் பொருளியல் மந்தநிலையிலும் வீடு வாங்குவதில் மக்களிடையே தென்படும் ஆர்வம் சந்தை நிலவரத்தை சரிவர பிரதிபலிக்காமல் போகலாம் என சொத்துச் சந்தை நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்.
ஆணையத்தின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, சொத்து முகவர்கள் ஒருவருக்கு வழங்கும் விருப்ப உரிமைப் பத்திரம் காலாவதியானபின் அதே நபருக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் அதே சொத்து தொடர்பாக வாங்குவதற்கான விருப்ப உரிமைப் பத்திரத்தை மீண்டும் வழங்க முடியாது. இதன்வழி, ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்குவதா வேண்டாமா எனத் தடுமாறும் நிலையில் இருப்பவர்களை இது ஒதுக்கிவிடும் என்று சொத்து சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.