மக்கள் குரல் என்ற அரசியல் கட்சியின் தலைவரான வழக்கறிஞர் லிம் டியென் அவரின் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
நம்பிக்கை மோசடி சந்தேகத்தின் பேரில் அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமான காரியத்தைச் செய்து அதன் மூலம் அலைக்கழிப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் காரணம் என்று தனது வழக்கறிஞர் மூலம் லிம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் “புலன்விசாரணைகளுக்கு அரசியல் காரணம் என்று கூறப்படுவதைத் தான் மறுப்பதாகவும் போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
“தங்களுக்கு எதிராக லிம் டியென் கடுமையான குற்றச்செயல்களைச் செய்து இருப்பதாக, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் போலிசில் புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை விசாரிக்க வேண்டிய கடமை போலிசுக்கு இருக்கிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
“நம்பிக்கை மோசடி தொடர்பில் லிம்மின் முன்னாள் வாடிக்கையாளரின் வழக்கறிஞர்கள் போலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.
“மோட்டார் வாகன காயம் தொடர்பான வழக்கு ஒன்றில் தன் சார்பில் முன்னிலையான லிம், நீதிமன்றம் தனக்கு இழப்பீடாக அளித்த பணத்தைத் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று அந்த வாடிக்கையாளர் கூறுகிறார்.
“முன்னாள் ஊழியர் ஒருவரைச் சட்டவிரோதமாக அலைக்கழித்தது தொடர்பில் லிம் விசாரிக்கப்பட்டு வருகிறார்,” என போலிஸ் கூறியது.
இவற்றின் தொடர்பில் லிம்முடன் தொடர்புகொண்ட போலிஸ், அவரை திங்கட்கிழமையன்று கட்டாய விசாரணைக்கு வரும்படி எழுத்து மூலமாகக் கேட்டுக்கொள்ளும் கடிதம் ஒன்றை புதன்கிழமை கொடுத்தது.
தேவை எனில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விசாரணைக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தனக்கு எதிரான நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்றும் ஞாயிற்றுக்கிழமை தன் வழக்கறிஞர் மூலம் லிம் தெரிவித்து விட்டதாக போலிஸ் குறிப்பிட்டது.
விசாரணையைத் தொடர வேண்டி இருப்பதால் லிம்மை கைது செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று போலிஸ் தெரிவித்தது.
இதனிடையே, லிம் சார்பில் முன்னிலையாகும்படி தான் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் எம். ரவி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
லிம்முக்கு எதிராக நம்பிக்கை மோசடி புகார், சிவில் நீதிமன்றத்தில் இருப்பதால் அவர் கைதுசெய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று வழக்கறிஞர் ரவி கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங்குடன் கூடிய அவதூறு வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடக்கவிருக்கிறது. அதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் லிம்மை அவருடைய அலுவலகத்திற்கு மூன்று போலிஸ் அதிகாரிகள் சென்று கைதுசெய்து இருக்கிறார்கள் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.