வேலை ஆதரவுத் திட்டத்தை ஜூலை மாதம் ஏறக்குறைய 2,200 முதலாளிகள் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆகையால் அவர்களின் கோரிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
முதலாளிகளில் 444 பேருக்கு ஏறக்குறைய $10 மில்லியன் தொகை மறுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது. மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ள முதலாளிகள் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவான பத்திரங்களைத் தாக்கல் செய்யும் வரை அவர்களுக்கான பணப் பட்டுவாடா நிறுத்தி வைக்கப்படும் என்று இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுபரிசீலனையின்போது பிரச்சினைகள் ஏதேனும் தலைதூக்கினால் அத்தகைய முதலாளிகளுக்குத் தொகை மறுக்கப்படும் அல்லது சரி செய்யப்படும். கடுைமயான விவகாரங்கள் ஏதேனும் தெரியவந்தால் போலிசிடம் தெரிவிக்கப்படும். வேலை ஆதரவுத் திட்டம் மூலம் நியாயமாகவும் சரியாகவும் பணம் கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த ஆணையம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போதைய நடவடிக்கை இடம்பெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆணையத்துக்குச் செப்டம்பர் மாத முடிவு வாக்கில் 1,400க்கும் அதிக முதலாளிகளிடம் இருந்து பல பத்திரங்களும் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பான மறுபரிசீலனைகளை ஆணையம் முடித்துக்கொண்டு உள்ளது.
ஏறக்குறைய 50 முதலாளிகள் கட்டாய மசே நிதி சந்தா தொடர்பில் தவறான தகவல்களை வேண்டுமென்றே தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகை சரிசெய்யப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது. வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் அக்டோபர் மாதம் பணம் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக முதலாளிகளுக்கு ஆணையம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் தாங்கள் கட்டாய மத்திய சேம நிதிச் சந்தாவை ஊழியர் கணக்கில் செலுத்தி இருப்பதை முதலாளிகள் பரிசீலித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு இருக்கிறது.
இந்த ஆதரவுத் திட்டத்தை முதலாளிகள் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆணையத்துக்கு 300க்கும் அதிக புகார்கள் வந்துள்ளன.இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு விவகாரங்கள் பற்றி போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவை பற்றி போலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
வேலை ஆதரவுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்தத் திட்டம் உள்ளூர் ஊழியர்களை முதலாளிகள் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ள சம்பள மானியம் மூலம் உதவுகிறது.