திறந்த நிலையையும் உலகத் தொடர்பையும் சிங்கப்பூர் ஒருபோதும் கைவிடாது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவற்றின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் உணர்ந்துகொண்டு இருப்பதாகவும் அந்த நிலையில் இருந்து சிங்கப்பூர் ஒருபோதும் மாறாது என்றும் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இதுவரையில் நாம் அனுபவித்திராத ஒரு காலகட்டம் இப்போது ஏற்பட்டு இருப்பதையும் தங்களுடைய எதிர்காலம் பற்றி சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள கவலை அதிகரிப்பதையும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டு சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பது முக்கியமானது என்றார்.
இதில் எப்போதுமே நியாயமான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் என்றும் அவர் உறுதி கூறினார்.
வர்த்தக தொழில் சபை உறுப்பினர்கள் சிங்கப்பூர் ஊழியர்கள் அடங்கிய மூலாதார அணியைப் பலப்படுத்தவும் ஊழியர்களைச் சேர்ப்பதில் நியாயமான, நேர்மையான அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகவும் உறுதி தெரிவித்து இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் திரு சானுடன் அக்டோபர் 1ஆம் தேதியன்று கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடந்தது.
சிங்கப்பூர் தொழில்துறைக் கூட்டமைப்பு நடத்திய அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு தொழில் சபைகளைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் வெளிநாட்டினருக்கு எதிரான உணர்வு தலைதூக்கி வருவது பற்றியும் அந்த உணர்வு காரணமாக எதிர்கால வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் வெளிநாட்டு தொழிற்சபையினர் கவலை தெரிவித்தனர்.
இது பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த அமைச்சர், சிங்கப்பூர் பொருளியலில் வெளிநாட்டு ஊழியர்கள் பிரச்சினையும் அவர்கள் ஆற்றும் பங்கும் கடந்த சில மாதங்களாக கவனத்தைக் கவர்ந்து இருக்கின்றன என்றார்.
சிங்கப்பூர் அனைத்துலக நிறுவனங்களுக்குத் தொழில் தோழமை சூழலைத் தொடர்ந்து ஏற்படுத்தித் தரும் என்றாலும் சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரையில் அது நியாயமாக நடந்துகொள்ளும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழில்துறைப் பயணங்களைப் பொறுத்தவரையில் எல்லைகளை மேலும் பல நாடுகளுக்குத் திறந்து விட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், மேலும் பயணங்களை அனுமதிப்பதற்கான வழிகளைப் பற்றி சிங்கப்பூர் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
புருணை, நியூசிலாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிட சிங்கப்பூர் ஒரு தலைபட்சமாக எடுத்துள்ள முயற்சி களையும் அமைச்சர் திரு சான் சுட்டினார். மேலும் பல நாடுகள் இதேபோல நடந்துகொண்டு தங்கள் எல்லைகளைத் திறந்துவிடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.