சட்டத்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் சட்ட மாணவர்கள் மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகளை வழங்கவும் புதிய பத்தாண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நடந்த ‘டெக்லா.ஃபெஸ்ட்’ எனும் வருடாந்திரக் கருத்தரங்கில் ‘சட்டத்துறைத் தொழில்நுட்ப, புத்தாக்கத் திட்டம்’ எனும் அந்தத் திட்டத்தை சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் அறிமுகம் செய்தார்.
சட்டத்துறையில் புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு ஊக்குவிப்பு, அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் சட்டத்துறை வளர்ச்சி ஆகியவை தொடர்பில் சட்ட அமைச்சு வகுத்துள்ள திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
சட்ட நிறுவனங்கள் மின்னிலக்கமயமாதலுக்கு ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதை மதிப்பிடவும் அவை பயன்படுத்தவல்ல தொழில்நுட்பங்களை அடையாளம் காணவும் ஏதுவாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடனும் சட்டத் துறை பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதும் அதில் அடங்கும்.
தகுதியுள்ள வழக்கறிஞர்கள் தங்களது நிபுணத்துவ மேம்பாட்டின் ஒரு பகுதியாக தங்களது தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.