நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் மூலம் பிரச்சினைகளை எழுப்புவதற்குப் பதிலாக உறுப்பினர்கள் வேறு பல வழிகளிலும் பேசலாம் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்து இருக்கிறார். எடுத்துக்காட்டாக, அவர்கள் முக்கியமான தீர்மானம் மூலமாகவோ அல்லது நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதன் மூலமாகவோ பிரச்சினைகளைப் பற்றிப் பேசலாம் என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
குற்றவியல் நீதித் துறையில் சமத்துவத்தை மேம்படுத்துவது குறித்து பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம்மின் ஒத்தி வைப்புத் தீர்மானம் நாடாளுமன்ற விவாதத்திற்கான வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று செவ்வாய்க்கிழமையன்று திரு டான் வெளிப்படுத்தியதை அடுத்து, கடந்த வாரம் இந்தப் பிரச்சினை கவனத்தை ஈர்த்தது.
முன்னாள் இந்தோனீசிய பணிப்பெண் பார்த்தி லியானி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி சில்வியா லிம் நம்பி இருந்தார். தமது முன்னாள் முதலாளியான பிரபல தொழிலதிபர் லியூ முன் லியோங்கின் குடும்பத்திடமிருந்து $34,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாக குமாரி பார்த்தி குற்றம் சாட்டப்பட்டார்.
உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர், குற்றவியல் நீதித்துறையில் வசதி குறைந்தவர்கள் நடத்தப்படுவது குறித்து அந்த நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த செவ்வாயன்று நடந்த வாக்கெடுப்பில் நீ சூன் குழுத்தொகுதி எம்.பி. லுயிஸ் இங்கின் ‘மற்றவர் புகைப்பதன் மூலம் வெளியாகும் புகை’ குறித்த ஒத்திவைப்பு தீர்மானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திரு டான் கூறினார்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வை, குற்றவியல் நீதித்துறை தொடர்பான பிரச்சினையைவிட புகைப் பிரச்சினை முக்கியமானதாகக் கருதப்பட்டது ஏன் என்று சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பினார்.அன்றைய முக்கியமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்காத நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தமது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதி இல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்றார் அவர்.
பொதுவாக, நாடாளுமன்ற அமர்வின் இறுதியில், அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒரு விஷயம் குறித்துப் பேச விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்வார். ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தால் வாக்கெடுப்பு நடைபெறும். தேர்வு செய்யப்படாதவர்கள் மற்றொரு நாளுக்கு மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
குமாரி பார்த்தியின் வழக்கு தொடர்பாக கணிசமான எண்ணிக்கையிலான கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளன என்று திரு டான் தெரிவித்தார்.