தளர்வு நடவடிக்கைகளின் மூன்றாவது கட்டத்திற்குள் சிங்கப்பூர் அடியெடுத்து வைக்கும்போது இரண்டாம் கட்டத் தளர்வைப் போல மாற்றங்கள் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
ஆயினும், இந்த இரண்டு காலகட்டங்களுக்கும் இடையிலான வரையறைகள் தெளிவாக இல்லாமல் இருப்பது நல்ல அணுகுமுறையாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவ்விரண்டு கட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளின் தெளிவின்மை, அரசாங்கக் கொள்கை வகுப்பு நடைமுறையில் செயல்திறன் மிக்கதாக இருப்பதைக் காட்டுவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதார அறிவியல் நிலைய இயக்குநர் இணைப் பேராசிரியர் ஜோசிப் கார் தெரிவித்தார். மாற்றங்கள் சிறிய அளவில் படிப்படியாகக் கொண்டுவரப்படும்போது பொதுமக்கள் அவற்றை ஏற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூன் 19ஆம் தேதியன்று இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கை நடப்பிற்கு வந்தது. பெரும்பாலான வர்த்தகங்களும் சமூக நடவடிக்கைகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தக் கட்டத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக, திருமணங்களுக்கு அனுமதிக்கப்படும் வருகையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, ஆஸ்திரேலியாவிலிருந்தும் (விக்டோரியா மாநிலம் தவிர்த்து), வியட்நாமிலிருந்தும் வரும் சுற்றுப்பயணிகளை அனுமதிப்பது போன்ற கட்டுப்பாட்டுத் தளர்வுகள் அறிமுகம் கண்டுள்ளன. இதனால் தளர்வு நடவடிக்கைகளின் மூன்றாம் கட்டத்தை சிங்கப்பூர் நெருங்குகிறதா என சிங்கப்பூரர்கள் பலர் எண்ணலாம்.
எப்படி இருந்தாலும், பொதுமக்களுக்குத் தடுப்பூசி கிடைக்கும் வரை, இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்புவதை சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்க முடியாது என்று பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரிவித்தார்.
“கட்டுப்பாடுகளை நிதானமாகத் தளர்த்துவது முக்கியம். ஏனெனில் இந்த விவகாரத்தில் அவசரப்பட்ட நாடுகள் கிருமித்தொற்று இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகின்றன. பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் வட்டார அளவிலான முடக்கநிலைகளை அறிவிக்கின்றன. இஸ்ரேல் தேசிய அளவில் மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தது,” என்று திரு குக் கூறினார்.
“மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கை தொடர்பிலான கொள்கை முடிவுகள் அறிவியலையும் மருத்துவத்தையும் நிலைமை குறித்த முழுமையான கண்ணோட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுகாதார அச்சுறுத்தல் மட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிலர் அனுபவிக்கும் தனிமையால் ஏற்படும் அபாயத்தையும் கருதவேண்டும்; அவ்விரண்டுக்கும் இடையே சமநிலை வேண்டும்,” என்கிறார் ஆசிய பசிபிக் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தொற்றியல் சங்கத் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா.
“பெரிய அளவிலான குடும்ப ஒன்றுகூடல்களை இக்காலகட்டத்தில் அனுமதிக்கலாம் என்பது என் கருத்து,” என்றார் அவர்.