தயார்நிலை தேசிய சேவையாளர்களின் குடும்பத்தினர், சாஃப்ரா மற்றும் ஹோம்டீம்என்எஸ் ஆகிய மனமகிழ் மன்றங்களில் இலவசமாக உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும். 2வது மற்றும் அடுத்தடுத்த குடும்ப உறுப்பினர்களுக்குக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
சாஃப்ரா மற்றும் ஹோம்டீம்என்எஸ் மனமகிழ் மன்றங்களுக்கான இந்தப் புதிய குடும்ப உறுப்பினர் திட்டத்தின்படி, தேசிய சேவையாளரின் வாழ்க்கைத் துணையும் அவரின் பிள்ளைகளும் மட்டும் உறுப்பினராகச் சேரலாம்.
இதன் மூலம் 630,000 பேருக்கும் அதிகமான தேசிய சேவையாளர்கள் நன்மை அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முறையின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை ஒவ்வோர் உறுப்பினர் பதிவுக்கும் $10 நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்தவேண்டாம்.
தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் சாஃப்ரா தலைவருமான ஸாக்கி முகம்மது, இன்று சாஃப்ரா ஈசூன் மனமகிழ் மன்றத்துக்குச் சென்றார். “இந்த கொவிட்-19 தொற்று காலத்தில் குடும்பத்தினர் ஒன்றாக பொழுதைக் கழிக்க இடம் தேடுகிறார்கள்.
“தேசிய சேவையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சாஃப்ரா மனமகிழ் மன்ற வசதிகளை அனுபவிக்கலாம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.