அறிவிக்கப்பட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்கான நிதிவளம் பற்றி துணைப் பிரதமர் விளக்குவார்
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நாளை நாடாளுமன்றத்தில் அமைச்சு நிலை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்கிறார். ஆனால் அதில் புதிய கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் எதுவும் இடம்பெற்று இருக்காது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ள ஆதரவுத் திட்டங்களுக்கு வளங்கள் எப்படி ஒதுக்கப்படும் என்பது பற்றி அவர் விளக்குவார்.
திரு ஹெங் ஃபேஸ்புக்கில் நேற்று இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நாளை துணை நிதி ஆதார மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் தொடர்பிலான விவரங்களைத் தெரிவிப்பதே தனது அமைச்சுநிலை அறிக்கையின் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா இந்த ஆண்டில் தாக்கலாகும் இத்தகைய மூன்றாவது மசோதா ஆகும்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளில் இருந்து நிறுவனங்களும் ஊழியர்களும் மீண்டுவர உதவுவதற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி பல ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அவற்றுக்கான நிதி வளங்களை புதிய மசோதா ஒதுக்கித்தரும். சுமார் $8 பில்லியன் மதிப்புள்ள அந்த ஆதரவு நடவடிக்கைகளையும் மசோதாவையும் நாடாளுமன்றம் விவாதிக்கும்.
“கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் $100 பில்லியன் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“அதில் பெரும்பாலான பங்கைப் பயன்படுத்தி ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்கவும் பலரையும் எட்டவும் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நானும் எனது குழுவினரும் முழு கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
அந்த ஆதரவுத் திட்டங்களை நிறுவனங்களும் ஊழியர்களும் நன்கு பயன்படுத்திக்கொள்வர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
துணைப் பிரதமர், வெள்ளிக்கிழமை சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பேராளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் வாழ்க்கைத் தொழில் பயிற்றுவிப்பாளர்களையும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர் இங் சீ மெங்குடன் சேர்ந்து சந்தித்தார்.
அந்தக் கூட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த துணைப் பிரதமர், வேலை தேடுவோரும் நிறுவனங்களும் எதிர்நோக்கும் பாதிப்புகள் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்றார்.
வரும் மாதங்களில் இடம்பெறக்கூடிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள், அடுத்த வரவுசெலவுத் திட்டத்துக்கான யோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவும் அவை உதவியதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார்.