ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 155,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள், பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டு, யு-சேவ் திட்டத்தின் மூலம் இந்த மாதம் வழக்கத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக பயனீட்டுக் கட்டணக் கழிவைப் பெறுவார்கள்.
பெரிய குடும்பங்களுக்கான தள்ளுபடியின் அளவு, அவர்கள் வசிக்கும் வீட்டின் அளவைப் பொறுத்து வழங்கப்படும். ஓரறை, ஈரறை வீவக வீடுகளில் வசிப்போர் வழக்கமான $100க்கு பதிலாக $200 தள்ளுபடியைப் பெறுவார்கள்.
கூடுதல் தள்ளுபடிகளுடன் மூவறை, நான்கறை வீடுகளில் வசிக்கும் பெரிய குடும்பங்கள் இந்த மாதத்தில் முறையே $180, $160 பெறுவர். ஐந்தறை வீடுகளில் வசிப்போர் $140ம், எக்ஸிகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப்போர் $120ம் தள்ளுபடியைப் பெறுவர்.
பெரிய குடும்பங்களுக்கான அதிகரிக்கப்பட்ட இரு பயனீட்டுக் கட்டணக் தள்ளுபடிகளில் முதலாவது இம்மாதம் வழங்கப்படுகிறது. அடுத்த கழிவு ஜனவரி 2021இல் வழங்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் மொத்தம் 940,000 குடும்பங்கள், இந்த மாதம், யு-சேவ் திட்டத்தின் தள்ளுபடிகளைப் பெறும்.
“வேலை நிச்சயமற்ற நிலை அதிகரித்திருக்கும் இவ்வேளையில், செலவுகள் குறித்த குடும்பங்களின் கவலை புரிந்துகொள்ளக்கூடியது,” எனறார் அவர். “இந்த சிரமமான காலகட்டத்தைச் சமாளிக்க இந்த கூடுதல் ஆதரவு உதவும் என்று நான் நம்புகிறேன்,” என திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில், அரசாங்கம் மொத்தம் $630 மில்லியன் மதிக்கத்தக்க பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டு, யு-சேவ் தள்ளுபடிகளை வழங்குகிறது என்று நிதியமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (அக்டோபர் 5) அச்சுப் பிரதியை நாடுங்கள்!