தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் (டோக்கன்கள்) விநியோகம் தீவு முழுவதும் உள்ள கடைத்தொகுதிகள், சமூக மன்றங்கள் என ஏறத்தாழ 100 இடங்களுக்குக் கட்டங்கட்டமாக விரிவுபடுத்தப்படும்.
ஜாலான் புசார், தஞ்சோங் பகார் வட்டாரங்களில் உள்ள சமூக மன்றங்கள் மற்றும் நிலையங்களில் கடந்த மாதம் 14ஆம் தேதி ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் விநியோகம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இதுவரை 100,000க்கும் அதிகமான கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமம் நேற்று தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை கூடுதலாக 18 சமூக நிலையங்களில் வில்லைகளின் விநியோகம் தொடங்கின. இனிவரும் வாரங்களில் பல்வேறு கடைத்தொகுதிகளிலும் பொதுமக்கள் இந்தக் கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘டிரேஸ்டுகெதர்’ திட்டம், தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதற்கான முயற்சிகளுக்குக் கைகொடுக்கிறது.
ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண இது உதவுகிறது. ‘டிரேஸ்டுகெதர்’ கருவி அல்லது கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள ‘டிரேஸ்டுகெதர்’ செயலி மூலம் இது சாத்தியமாகிறது.
பிடோக் மால் கடைத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘டிரேஸ்டுகெதர்’ கூடத்தை நேற்று பார்வையிட்ட தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, சிங்கப்பூர் மக்கள்தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினரை ‘டிரேஸ்டுகெதர்’ திட்டத்தில் இணைப்பது குறித்த அரசாங்கத்தின் இலக்கு பற்றி பேசினார். ஆனால், அரசாங்கம் எத்தனை கருவிகளை விநியோகம் செய்ய இருக்கிறது என்பது பற்றி அவர் கூறவில்லை.இதுநாள் வரை ‘டிரேஸ்டுகெதர்’ கைபேசி செயலியை 2.4 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் இது ஏறக்குறைய 40 விழுக்காடாகும். சிங்கப்பூரில் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில், பெரிய அளவிலானோர் கூடும் இடங்களில் மற்றும் கிருமி பரவும் சாத்தியம் உள்ள சூழலில் ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது கருவியின் பயன்பாட்டை அரசாங்கம் கட்டாயமாக்குவதாக டாக்டர் ஜனில் சொன்னார்.
‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இடங்கள், கால அட்டவணை குறித்த விவரங்களை https://token.gowhere.gov.sg/ எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.