ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 155,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள், பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டு, யு-சேவ் திட்டத்தின் மூலம் இந்த மாதம் வழக்கத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக பயனீட்டுக் கட்டணக் கழிவைப் பெறுவார்கள்.
பெரிய குடும்பங்களுக்கான தள்ளுபடியின் அளவு, அவர்கள் வசிக்கும் வீட்டின் அளவைப் பொறுத்து வழங்கப்படும். ஓரறை, ஈரறை வீவக வீடுகளில் வசிப்போர் வழக்கமான $100க்கு பதிலாக $200 தள்ளுபடியைப் பெறுவார்கள்.
கூடுதல் தள்ளுபடிகளுடன் மூவறை, நான்கறை வீடுகளில் வசிக்கும் பெரிய குடும்பங்கள் இந்த மாதத்தில் முறையே $180, $160 பெறுவர்.
ஐந்தறை வீடுகளில் வசிப்போர் $140ம், எக்ஸிகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப்போர் $120 தள்ளுபடியைப் பெறுவர்.
பெரிய குடும்பங்களுக்கான அதிகரிக்கப்பட்ட இரு பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகளில் முதலாவது இம்மாதம் வழங்கப்படுகிறது. அடுத்த கழிவு 2021 ஜனவரியில் வழங்கப்படும்.
யு-சேவ் திட்டம் குடும்பங்கள் தங்களது வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க, குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தைக் கொண்டது என நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குடும்பங்களின் பயனீட்டுக் கட்டணத்தில் நேரடியாக இந்தத் தள்ளுபடி வழங்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் மொத்தம் 940,000 குடும்பங்கள், இந்த மாதம் யு-சேவ் திட்டத்தின் தள்ளுபடிகளைப் பெறும்.
இத்திட்டத்தின் கீழ், முன்னதாக ஏப்ரல், ஜூலை மாதங்களில் தள்ளுபடி பெற்றனர். யு-சேவ் சிறப்பு வழங்கீட்டுக்குத் தகுதிபெற்ற குடும்பங்கள் கூடுதல் தள்ளுபடிகளைப் பெற்றன.
எஸ்பி குழுமத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறும் சிங்கப்பூரிலுள்ள 53% வீடுகளின் மின்சாரக் கட்டணம் உயருமென அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மின்சார கட்டணங்கள் சுமார் 9% உயரும் என்று எஸ்பி குழுமம் செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்து.
கொவிட்-19 பாரமரிப்பு ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரிய குடும்பங்களுக்கு கூடுதல் யு-சேவ் தள்ளுபடிகளை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
தற்போதைய சிரமமான காலத்தில் இந்த தள்ளுபடிகள் குடும்பங்களுக்கு உதவும் என தாம் நம்புவதாக திரு ஹெங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
“வேலை நிச்சயமற்ற நிலை அதிகரித்திருக்கும் இவ்வேளையில், செலவுகள் குறித்த குடும்பங்களின் கவலை புரிந்துகொள்ளக்கூடியது,” எனறார் அவர்.
“இந்த சிரமமான காலகட்டத்தைச் சமாளிக்க இந்த கூடுதல் ஆதரவு உதவும் என்று நான் நம்புகிறேன்,” என துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிதியாண்டில், அரசாங்கம் மொத்தம் $630 மில்லியன் மதிக்கத்தக்க பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டு, யு-சேவ் தள்ளுபடிகளை வழங்குகிறது என்று நிதியமைச்சு தெரிவித்தது.